கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் பல்வேறு வழக்குகளில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் வேளையில் அவருக்கு எதிராக வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
திரு நஜிப்பை நொடித்துப் போனவராக அறிவிக்க வேண்டும் என்று உள்நாட்டு வருவாய் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் தொடர்பில் தமக்கு கடிதம் வந்துள்ளதாக திரு நஜிப் ரசாக் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சுமார் 1.74 பில்லியன் ரிங்கிட் (S$564 மில்லியன்) வரியைக் கட்டவில்லை என்று அவருக்கு அனுப்பிய கடிதத்தில் ஆணையம் தெரிவித்துள்ளது.
தன் மீது கொடூரமான வரி விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்குதகுந்த காரணமும் இல்லை என்றும் திரு நஜிப் கூறியுள்ளார்.
வருமான வரித் துறையின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கும் மனுவைத் தாக்கல் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
"உண்மையை அடிப்படையாக வைத்து நீதிபதிகள் நியாயமான முடிவை எடுக்க என்னுடைய வழக்கறிஞர்களுடன் சேர்ந்து முழு ஆற்றலைப் பயன்படுத்தி சிறந்த வகையில் மேல்முறையீடு செய்வேன்," என்று அவர் குறிப்பிட்டார்.
தன்னுடைய பெயரில் உள்ள வங்கிக் கணக்கில் மூன்று பில்லியன் ரிங்கிட் முதலீடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் பேசிய திரு நஜிப், சமூகப் பொறுப்புகளுக்கும் அரசியல் நோக்கத்துக்காகவும் நன்கொடை பெறுவதற்காக அந்தக் கணக்குப் பயன்படுத்தப்பட்டது என்றார்.
1எம்டிபியின் மில்லியன் கணக்கான நிதியைக் கையாடிய வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டதற்கு எதிராக நஜிப் மேல்முறையீடு செய்யவிருக்கிறார்.
இவ்வேளையில் வருமான வரித் துறையின் நடவடிக்கை அவர் மீது பாய்ந்துள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டில் 1.69 பில்லியன் ரிங்கிட்டை வரியாக செலுத்த வேண்டும் என்று நஜிப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார்.
"தான் நொடித்துப்போனவராக அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். கட்சித் தேர்தலிலும் தேசிய தேர்தலிலும் போட்டியிடும் தகுதியை இழக்க நேரிடும்," என்று அவர் மேலும் சொன்னார்.
ஆளும் கூட்டணியில் அவரது அம்னோ கட்சி அங்கம் வகித்தாலும் அரசாங்கத்தை திரு நஜிப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
அம்னோ கட்சியும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பிரதமர் முகைதீனுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. இதனால் ஆளும் கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையே உறவு மோசமடைந்து உள்ளது.