யங்கூன்: மியன்மாரின் ராணுவ ஹெலிகாப்டரை நேற்று சுட்டு வீழ்த்தியதற்கு தி கச்சின் இண்டிபென்டன்ஸ் ஆர்மி (கேஐஏ) எனும் போராளிக் குழு பொறுப்பேற்றுள்ளது. நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதில் பொதுமக்கள் ஐவர் உயிரிழந்தனர்.
நேற்று மொமுவாக் நகருக்கு அருகில் கடுமையான சண்டை நடந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கேஐஏ அமைப்பு தெரிவித்தது.
இவ்வாண்டு பிப்ரவரி முதல் தேதி அங்கு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது முதல் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில், இனப் போராளி குழுக்களுடன் நீண்டகாலமாக கனன்றுகொண்டிருந்த பிரச்சினைகள் பெரிய சண்டையாக உருவெடுத்துள்ளன.
வடக்கு கச்சின் மாநிலத்தில் ராணுவத்தினருக்கு எதிராக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கிளர்ச்சி செய்யும் கேஐஏ அமைப்பின் மீது அண்மைய வாரங்களில் ஆகாயத் தாக்குதல்களை ராணுவம் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
"இன்று காலை 8 மணி முதல் எங்களது வீரர்கள் மீது ஜெட் போர்விமானம், ஹெலிகாப்டர் ஆகியவற்றின் மூலம் கடும் தாக்குதலை ராணுவம் நிகழ்த்தியது. எங்களது வீரர்கள் எதிர்த் தாக்குதல் நடத்தியபோது ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டது," என நேற்று கேஐஏ அமைப்பின் பேச்சாளர் கலோனல் நவ் பு தெரிவித்தார். ராணுவத் தரப்பில் பதிலேதும் அளிக்கப்படவில்லை என ஏஎஃப்பி கூறியது.
ராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில் தப்பியோடும் ஜனநாயக ஆதரவு ஆர்வலர்களுக்கு தங்க இடமளிப்பது, பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் மியன்மாரின் இனப் போராளி குழுக்கள் பல முன்வந்துள்ளன.
நேற்று முன்தினம் போராட்டக்காரர்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஐவர் உயிரிழந்ததாகவும் ஆசியான் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டதற்குப் பிறகு அதிக எண்ணிக்கையிலானோர் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர் எனவும் அரசியல் கைதி
களுக்கான உதவி அமைப்பு தெரிவித்தது.
அனைத்துலக பத்திரிகை சுதந்திர தினமான நேற்று மியன்மாரில் உள்ள வெளிநாட்டுத் தூதரகக் குழுக்கள் சில, செய்தியாளர்களை மியன்மாரின் ராணுவம் நடத்தும் முறை பற்றிக் கண்டனம் தெரிவித்தன.
கைதாகியிருக்கும் செய்தி
யாளர்களை விடுவிக்கும்படியும் இணையம், தகவல் தொடர்பு தடைகளைத் தளர்த்தும்படியும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் வெளியிட்ட அறிக்கை கேட்டுக்கொண்டது.