தைப்பே: இந்தியாவில் கடந்த 14 நாள்களுக்குள் தங்கி, வரும் பயணிகளுக்கு இன்று முதல் தைவான் தடை விதித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் சென் ஷி சங் கூறியுள்ளார். இந்தியாவிலிருந்து வரும் தைவான் குடிமக்களுக்கு இந்தத் தடை இல்லை.
இந்தியாவிலிருந்து தைவானுக்கு வரும் தைவான் குடிமக்கள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர். இந்தியாவில் வசிக்கும் தைவான் நாட்டவர்கள் 150 பேரை அழைத்து வர விமானம் அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், வேறு எந்த நாடும் அத்தகைய நடவடிக்கை எடுக்காததால், அதற்கு இப்போது தேவை ஏற்படவில்லை என தைவான் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவில் காணப்படும் உருமாறிய கொரோனா கிருமி பிரிட்டன், ஈரான், சுவிட்சர்லாந்து உட்பட 17 நாடுகளில் பரவி இருப்பதாகக் கூறப்படும் வேளையில், இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்குப் பல நாடுகள் தடை விதித்து வருகின்றன.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட, அதிவிரைவாகப் பரவும் தன்மையுடைய ‘பி1617’ ரக கொரோனா கிருமி இந்தோனீசியாவில் இருவருக்குத் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இந்தோனீசிய சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா கிருமிப் பரவலும் பாலியில் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவிலிருக்கும் ஆஸ்திரேலியர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப வேண்டாம் எனவும் அவ்வாறு திரும்பினால் அவர்களுக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் வரை (S$66,600) அபராதமும் ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என ஆஸ்திரேலியா அறிவித்திருப்பதற்கு மனித உரிமைஅமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆனால், ஆஸ்திரேலியர்களின் சுகாதார நலன்களைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சின் ஆலோசனைப்படியே இந்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தற்காத்துப் பேசியுள்ளார்.
உள்ளூரில் கிருமிப் பரவலை வெகுவாகக் கட்டுப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியா, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இந்தியாவிலிருந்து வருவோருக்குத் தடை விதித்த அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளைப்போல தாமும் தடைவிதித்தது.
ஆனால், சனிக்கிழமை ஒருபடி மேலே சென்று, ஆஸ்திரேலியக் குடிமக்கள் இந்தியாவிலிருந்து சொந்த நாட்டுக்குத் திரும்பவும் தடை விதித்தது.
இந்தியாவில் தொடர்ந்து 12வது நாளாக நேற்று 300,000க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு கிருமி தொற்றியோரின் எண்ணிக்கை 20 மில்லியனைக் கடந்துள்ளது.