லண்டன்: ஜி-7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் நேற்று லண்டனில் நடைபெற்ற கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றனர். கொரோனா தொற்றுப் பரவலுக்குப் பிறகு ஜி-7 நாடுகளின் பிரதிநிதி கள் பங்கேற்கும் முதல் நேரடிக் கூட்டம் இது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கனுடனான உரையாடலுடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார் பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டோமினிக் ராப்.
அடுத்த மாதம் பிரிட்டனில் நடைபெறவுள்ள ஜி-7 உச்சிநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்வது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் முன்னேற்பாடுகள் இடம்பெறும்.
ஜி-7 உறுப்பு நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவை ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, தென்கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தன. நேற்று மாலை முதல் இந்தச் சந்திப்புகள் தொடங்கும் எனக் கூறப்பட்டது.
அதற்கு முன்பு அமெரிக்க, பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர்கள் பொதுவான இலக்குகள் பற்றி விவாதிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
ஈரானுடனான அணுவாயுதம் தொடர்பான பேச்சுவார்த்தை, பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் மேற்கொள்ளப்படும் அனைத்துலக முயற்சிகளில் பங்கெடுப்பதன் தொடர்பிலான திரு பைடனின் விருப்பம் ஆகியவற்றின் மீது பிரிட்டன் விருப்பம் கொண்டுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் இரு நாட்டு அமைச்சர்கள் மேற்கொள்வர் என்றும் கூறப்பட்டது.