கோலாலம்பூர்: மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள சிலாங்கூர் மாநிலத்தின் ஒன்பதில் ஆறு மாவட்டங்களில் முதல் அடுக்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாளை முதல் 12 நாட்களுக்கு நடப்புக்கு வருகிறது. கொவிட்-19 தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் பரவலான பொதுமுடக்கம் இருக்காது என்பதை நேற்று இரண்டு அமைச்சர்கள் கோடிட்டுக் காட்டினர்.
பரவலான பொதுமுடக்கம் இருக்காது என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று நடைபெற்ற செய்தியாளார் கூட்டத்தில் தெரிவித்தார்.
பெட்டாலிங், ஹுலு லங்காட், கோம்பாக், கிள்ளான், கோலா லங்காட், செபாங் ஆகிய மாவட்டங்களில் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடப்புக்கு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.
இந்த மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. மலேசியாவில் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்குத் தடை விதிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைகள் நடப்பில் இருந்தபோது வேலையிழப்புகள் ஏற்பட்டு பொருளியல் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, வர்த்தக நடவடிக்கைகள் இந்த ஆறு மாவட்டங்களிலும் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், வர்த்தகச் செயல்பாட்டு நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
கடந்த மாத மத்தியிலிருந்து தினசரி கொவிட்-19 தொற்று எண்ணிக்கை 2,000க்கு மேல் பதிவாகி வருவதை அடுத்து அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கடந்த 7 நாள்களில் ஐந்து நாள்கள் தொற்று எண்ணிக்கை 3,000க்கும் மேல் பதிவாகியுள்ளது. நேற்று மலேசியாவில் 3.120 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின.
தொற்று அதிகம் உள்ள இடங்களை அடையாளம் காண 'ஹைட்' எனப்படும் தரவுகளின் அடிப்
படையிலான அடையாளம் காணும் முறை நடப்புக்கு வருவதாக மற்றொரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார். தொற்று அதிகம் காணப்படும் இடங்களின் பட்டியலை வெளியிட்டால் பொதுமக்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும் என்றார் அவர்.