கோலாலம்பூர்: மலேசியாவில் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மாநிலங்களுக்கு இடையிலான, மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்கள் போலிஸ் அனுமதி இருந்தாலொழிய அனுமதிக்கப்படாது.
இந்தக் கட்டுப்பாடு மே 10 முதல் ஜூன் 6 வரை நடப்பில் இருக்கும் என்று மூத்த தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அறிவித்தார்.
இந்தக் காலகட்டத்தில் மக்கள் ஒன்றுகூட வகை செய்யும் அனைத்து சமூக, கல்வி, பொருளியல் நடவடிக்கைகளுக்கும் அனுமதி இராது என்றும் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் மற்றும் தனியார் துறை நடத்தும் அதிகாரபூர்வ, சமூக நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஜூன் 6 வரை அனுமதி இருக்காது என்றும் திரு இஸ்மாயில் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, இந்த முடிவு இரண்டு வாரங்களுக்குப் பின் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதோடு பெரிய கடைத்தொகுதிகள் உள்ளிட்ட கிருமித்தொற்று ஆபத்து அதிகம் உள்ள கட்டடங்களும் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மலேசியாவில் சென்ற ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு நாடளாவிய முறையில் மாவட்டங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடும் ஒன்று கூடுவதற்குத் தடையும் விதிக்கப்பட்ட பிறகு, இப்போதுதான் மீண்டும் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை சாதனை அளவாகக் கூடி வருகிறது. மலேசியாவின் சில மருத்துவமனைகளும் தீவிர கண்காணிப்புப் பிரிவுகளும் நிரம்பி வருகின்றன.
அங்கு நேற்று 3,733 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. கடந்த இரண்டு நாட்களாக 4,000க்கும் மேற்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவான நிலையில், நேற்று அந்த எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது.
தொடர்ந்து சிலாங்கூரில் ஆக அதிக எண்ணிக்கையில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
அங்கு நேற்று ஒரே நாளில் 1,278 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் சரவாக்கும் (454) ஜோகூரும் (365) உள்ளன.
இதையடுத்து அங்கு கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 440,677 ஆனது.
நாட்டில் கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான தன்னுடைய சுகாதார நடைமுறை நிபந்தனைகளை அரசாங்கம் எப்போதுமே மறுபரி
சீலனை செய்து வருவதாகவும் தொற்று அதிகரிக்குமானால் அந்த நிபந்தனைகள் கடுமையாக்கப்படலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
புதிய உருமாறிய கிருமி தலையெடுப்பதால் சூழ்நிலை கவலை தருவதாக மாறி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டே அரசாங்க நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அமைச்சர் தெரிவித்தார்.