ஜகார்த்தா: இந்தோனீசியாவில் நேற்று 12,264 பேர் தொற்றுக்கு ஆளாகினர். இது சென்ற பிப்ரவரி மாதத்திற்குப் பிறகு ஆக அதிக எண்ணிக்கையாகும்.
ஜகார்த்தாவில் ஆக அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தாலும் மேற்கு ஜாவா, மத்திய ஜாவாவிலும் கிருமித் தொற்று குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது.
மத்திய ஜாவாவின் குதுஸ் பகுதியில் சுமார் 930 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. சென்ற வாரம் இந்த எண்ணிக்கை 26ஆக இருந்தது.
தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதற்கு டெல்டா வகை கிருமி காரணமாக இருக்கக்கூடும் என்று சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முழு-மரபணு பரிசோதனையின்போது 145 மாதிரிகளில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்த ஆபத்தான 3 வகை கிருமிகளில் ஏதேனும் ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவற்றில் 104ல் டெல்டா வகை கிருமி உள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் சிட்டி நதியா டார்மிஜி சொன்னார்.
அங்கு மருத்துவமனை படுக்கை வசதிகள் ஏற்கெனவே கிட்டத்தட்ட 70 விழுக்காடு நிரம்பிவிட்டதாலும் நெருக்கடி ஏற்படும் நிலை இருப்பதாலும், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பெரியளவிலான கட்டுப்பாடுகள் வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு செய்ய அரசாங்கம் தயக்கம் காட்டுகிறது.