பேங்காக்: தாய்லாந்து தனது உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான புக்கெட் தீவை அனைத்துலகச் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறந்துவிடும் திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பரவலால் நலிவடைந்துள்ள சுற்றுலாத்துறை புத்துயிர் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாய்லாந்தை டெல்டா வகைக் கொரோனா கிருமி அச்சுறுத்தி வரும் வேளையில் அந்நாடு துணிச்சலாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனா தொற்று அச்சம் குறைந்துள்ள நாடுகளைச் சேர்ந்தோரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டோரும் தனிமைப்படுத்தலின்றி புக்கெட் தீவுக்கு அனுமதிக்கப்படுவர். நாட்டை அனைத்துலகப் பயணிகளுக்கு முழுமையாகத் திறப்பதற்கு இது ஒரு முன்னோட்டமாகும் என்றும் இது வெற்றியளித்தால் வரும் அக்டோபர் மாதத்திற்குள் தாய்லாந்து வெளிநாட்டுப் பயணிகளுக்கு முழுமையாகத் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
சுற்றுலாப் பயணிகளின் வருகையின்றி புக்கெட் தீவின் கடற்கரைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அங்குள்ள ஏராளமான உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், உடம்புப்பிடி நிலையங்கள் ஆகியவை வருமானமின்றி மூடிக்கிடக்கின்றன. நாட்டின் உயிர்நாடியான சுற்றுலாத்துறையை படிப்படியாகத் திறப்பதன்மூலம் நமது பொருளாதாரம் மீண்டும் மேம்படையும் என புக்கெட் சுற்றுலாத்துறையின் தலைவர் தானெத் தந்திபிரியகிஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும் கொரோனாவுக்கு முந்தைய காலத்தில் வருகை தந்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை இப்போது எதிர்பார்க்கமுடியாது. இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 100,000 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தில் 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்தத் தீவுக்கு வருகை தந்தனர்.
அனைத்துலகப் பயணிகளுக்குத் திறந்துவிடும் முதல் மாதத்தில் மட்டும் ஆறு விமான நிறுவனங்களின் 426 விமானங்களில் 8,281 பேர் புக்கெட் தீவுக்குப் பயணம் மேற்கொள்ள பதிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பொருளியலும் வர்த்தகமும் முன்னோக்கிச் செல்ல இந்த நடவடிக்கை தேவையானது என்று பிரதமர் பிரயுத் சான் ஒசா நேற்று கூறினார்.