சிட்னி: கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிட்னி மக்களுக்கு விரைவில் சுதந்திரமாக நடமாடுவதற்கான அனுமதி கிடைக்கவிருக்கிறது.
தடுப்பூசி போடும் இலக்கு நிறைவேறியதும் அடுத்த மாதம் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப் படுவார்கள்.
ஆஸ்திரேலியாவின் ஆகப்பெரிய நகரமான நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தலைநகர் சிட்னியில் திடீரென உருமாறிய 'டெல்டா' கிருமி பரவியது.
அந்தக்கிருமி அதி வேகத்தில் பரவக்கூடியது. இதையடுத்து ஜூலையிலிருந்து சிட்னி முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிட்னி மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'சுதந்திரத்திற்கான வழிகாட்டி' திட்டத்தை அரசாங்கம் நேற்று வெளியிட்டது.
அதன்படி மாநிலம் முழுவதும் 70 விழுக்காடு பெரியவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடும் பணி நிறைவேறியதும் சிட்னி மக்கள் சுதந்திரமாக நடமாட முடியும்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நேற்று 1.400 புதிய தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது, தினசரி தொற்றுச் சம்பவங்களில் மற்றொரு உச்சமாகும். இதுவரை கொவிட்-19 கிருமிக்கு 153 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாநில முதல்வர் கிளாடிஸ் பெரஜிக்லியான், சமூகத்தில் கிருமிப் பரவல் இருப்பதை ஏற்று இயல்பாக வாழக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சிட்னி முடக்கநிலையை அகற்று வதற்கான தேதியைத் தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
தடுப்பூசி போடும் இலக்கு நிறைவேறியதும் அடுத்து வரும் முதல் திங்கட்கிழமையில் சிட்னி திறக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது மாநிலத்தில் 43 விழுக்காடு பெரியவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
ஏறக்குறைய 75 விழுக்காட்டினருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதே வேகத்தில் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்றால் அடுத்த மாதம் இலக்கை எட்ட முடியும் என அரசாங்கம் நம்புகிறது.
அந்தச் சமயத்தில் கடைகளும் உணவகங்களும் வாடிக்கையாளர் வரம்புகளுடன் திறக்கப்படும் என்று பெரஜிக்லியான் தெரிவித்தார்.
பள்ளிகள் திறப்பது பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை.
முழுமையாகத் தடுப்பூசி ேபாட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே சிறப்புரிமைகள் வழங்கப்படும் என்றார் அவர்.
வீட்டில் ஐவர் வரை ஒன்றுகூடலாம், இருபது பேர் வரையிலான வெளிப்புற நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம், மாநிலம் முழுவதும் சுற்றி வரலாம் உள்ளிட்ட உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படும்.
தனிநபர் இடைெவளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் கேளிக்கை விடுதிகள், மதுபானக் கூடங்கள், சில்லறைக் கடைகள், உடற்பயிற்சிக் கூடம், விளையாட்டு நிலையங்கள், முடி திருத்தும் நிலையம், நக அழகு நிலையம், திரையரங்குகள், அருங்காட்சியகம், தேவாலயம் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை பூங்காக்கள் போன்றவை திறக்கவும் அனுமதியளிக்கப்படும்.