கோலாலம்பூர்: அதிக வேலை வாய்ப்புகள், கட்டுப்படியாகக் கூடிய வீடுகள், வறுமை ஒழிப்பு ஆகிய வற்றுடன் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி நாட்டின் பொருளியலை மீட்டெடுக்கும் இலக்குடன் 12வது மலேசியத் திட்டத்தை அந்நாட்டுப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
'செழிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, நீடித்த நிலைத்தன்மை கொண்ட மலேசியா' எனும் கருப்பொருளுடன் இந்த
ஐந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்
படுத்தப்படுகிறது.
சமூக நலம், ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு ஆகியவற்றில் இந்த வருங்காலத் திட்டம் கவனம் செலுத்தும்.
குறிப்பாக, வருமான அடிப்
படையில் கீழ்மட்டத்தில் இருக்கும் 40 விழுக்காட்டினரின் நலன் கருதி அவர்களுக்கு ஆதரவுக்கரம் வழங்கும் நோக்குடன் திட்டம் செயல் படுத்தப்படும்.
புதிய திட்டத்தின்கீழ் மாநிலங்கள், வட்டாரங்கள் இடையிலான மேம்பாட்டு இடைவெளிகளை குறைப்பதில் தீவிரம் காட்டப்படும்.
திட்டத்தை நிறைவேற்ற
மின்னிலக்க முறை, உயர் தொழில்நுட்பம் போன்றவை பயன்படுத்தப்படும்.
ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் சாபா, சரவாக் ஆகிய மாநிலங் களின் சமூகப் பொருளியல் மேம்பாட்டுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் போக்குவரத்து, தளவாடம் ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
நீடித்த நிலைத்தன்மைக்கு முன்னுரிமை கொடுத்து கரிம வெளியேற்றத்தைக் குறைத்து சுத்தமான, மீள்திறன்மிக்க மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாண்டிலிருந்து 2025ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதத்தை 4.5 விழுக்காட்டிலிருந்து 5.5 விழுக்காடு வரை உயர்த்த மலேசியத் திட்டத்தின்கீழ் இலக்கு வகுக்கப்பட்டு உள்ளது.
அதுமட்டுமல்லாது, 2025ஆம் ஆண்டுக்குள் மலேசியக் குடும்பங்களின் சராசரி மாத வருமானத்தை 10,000 ரிங்கிட்டாக உயர்த்த திரு இஸ்மாயில் திட்டமிட்டுள்ளார்.
தீபகற்ப மலேசியாவிற்கும் சாபா மாநிலத்திற்கும் இடைப்பட்ட தனி நபர் மொத்த உள்நாட்டு வருவாய் ஏற்றத்தாழ்வை 2025ஆம் ஆண்டு வாக்கில் 1.0லிருந்து 2.5 ஆகவும் தீபகற்ப மலேசியாவிற்கும் சராவாக் மாநிலத்திற்கும் இடைப்பட்ட இந்த ஏற்றத்தாழ்வை 1.0லிருந்து 1.2 ஆகக் குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.