வடக்கு இத்தாலியில் மிலான் நகருக்கு அருகே உள்ள காலிக் கட்டடம் ஒன்றின்மீது ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 3) சிறிய தனியார் விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த எட்டுப் பேரும் உயிரிழந்ததாக போலிசார் தெரிவித்தனர்.
மிலானிலுள்ள விமான நிலையத்திலிருந்து சர்டினியா தீவுக்கு அந்த விமானம் சென்றுகொண்டிருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
நகர்ப்புற மெட்ரோ ரயில் நிலையம் ஒன்றுக்கு வெளியே இந்த விபத்து நிகழ்ந்தது.
புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் விமானம் மோதிய அந்த இருமாடிக் கட்டடம் காலியாக இருந்தது. விமானம் விபத்துக்குள்ளானவுடன் வெடிப்புச் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
அங்கிருந்த வீதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களும் தீப்பற்றிக்கொண்டதாக அதை நேரில் கண்டவர்கள் கூறினர். ஆனால், வீதியில் இருந்தவர்களுக்கு உயிர்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.