இங்கிலாந்து பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி ஒன்றில் நேற்று முன்தினம் லிவர்பூலும் மான்செஸ்டர் சிட்டியும் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தின் முதல் 15 நிமிடங்கள் சிட்டி குழுவை லிவர்பூல் திணறடித்த போதிலும் அதன்பின் முற்பாதி ஆட்டம் முழு வதும் மான்செஸ்டர் சிட்டியின் தாக்குதலை எதிர்கொள்வதிலேயே லிவர்பூல் ஈடுபட்டது.
ஆனால், இரண்டாம் பாதியில் லிவர்பூல் அணி, சிட்டி குழுவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியது. ஆட்டம் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் லிவர்பூலின் சாடியோ மானே சக ஆட்டக்காரர் முகமது சாலா கொடுத்த பந்தை சிட்டி கோல் வலைக்குள் போட்டார். அவருடைய இந்த கோலால் சிட்டி திக்குமுக்காடியது.
இதற்குப் பதில் சொல்லும் வகையில் மான்செஸ்டர் சிட்டியின் ஃபில் ஃபோடன் ஒரு கோல் போட்டு ஆட்டத்தை சமநிலை செய்தார். ஆனால், இதற்குப் பின் நடந்ததைத்தான் சிட்டி சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மைதானத்தில் தனது பகுதியில் பந்தைப் பெற்றுக்கொண்ட லிவர்பூலின் சாலா சிட்டி தற்காப்பு அரணை உண்டு இல்லை என்று செய்து மிகவும் குறுகலான பாதையில் பந்தை செலுத்தி லிவர்பூலின் இரண்டாவது கோலைப் போட்டு சிட்டி குழுவை மீண்டும் திகைக்க வைத்தார்.
இந்த கோலை குறிப்பிட்டுப் பேசிய லிவர்பூல் நிர்வாகி யகர்ன் கிளோப், "உலகின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களால் மட்டுமே இதுபோன்ற கோல்களைப் போட முடியும். 50, 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆட்டத்தை நினைவுகூரு வோர், இந்த கோலைப் பற்றி நிச்சயம் பேசுவர்," என்று சாலாவின் அற்புதக் கோலுக்குப் புகழாரம் சூட்டினார்.
பின்னர் எப்படியோ ஆட்டம் முடிய ஒன்பது நிமிடங்கள் இருக்கும் நிலையில் சிட்டியின் கெவின் டி பிரய்ன உதைத்த பந்து லிவர்பூல் ஆட்டக்காரரின் மேல்பட்டு பாதை மாறி லிவர்பூல் கோல்காப்பாளரின் கைகளில் அகப்படாமல் வலைக்குள் புகுந்து ஆட்டத்தை 2-2 என்ற சமநிலையில் முடித் தது.