தோக்கியோ: ஜப்பானின் தற்காப்பைப் பலப்படுத்த அதிக நிதி ஒதுக்கப்படும் என ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் 31ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அக்கட்சி வெளியிடவுள்ள தேர்தல் அறிக்கையின் வரைவு கொள்கை திட்டத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தனது முதல் கொள்கை உரையை வழங்கிய அதன் புதிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அதிகப்படுத்தப்பட்ட பாதுகாப்புச் சூழலில் ஜப்பானையும் அதன் மக்களையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளதாக சொன்னார்.
சீனாவின் அதி வேக ராணுவ கட்டமைப்பும் வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணைத் திட்டங்களும் ஜப்பானின் பாதுகாப்பைப் பலப்படுத்த தூண்டியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் ஒரு விழுக்காடாக இருந்த பாதுகாப்பிற்கான வரவுசெலவு திட்டத்தை 2 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.
தாக்க வரும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை வாங்குவது உட்பட ஜப்பானின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் நவம்பர் மாத தொடக்கத்திற்குள் தடுப் பூசி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மருத்துவ வளங்களைப் பாதுகாக்க தேவையான அதிகாரங்களை அரசாங்கத்திற்கு வழங்க அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.