தைப்பே: தைவான் ராணுவ மோதலை விரும்பவில்லை என்று கூறியிருக்கும் அதன் அதிபர் சாய் இங்வென், அதேசமயம் அதன் சுதந்திரத்தைப் பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றும் கூறியுள்ளார். சீனா
வுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறிஉள்ளார்.
அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு நான்கு நாட்களுக்குள் 150 சீன விமானப்படை விமானங்கள் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் பறந்ததாக தைவான் கூறியது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக சீனாவின் இதுபோன்ற அத்து
மீறிய நடவடிக்கைகள் குறித்து தைவான் புகார் கூறிவருகிறது.
தைவானின் ஆயுதப் படையை வலுவிழக்க செய்யவும் பதிலடி கொடுக்கும் படைத் திறனைச் சோதிக்கும் நோக்கிலும் சீனா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தைவான் கருதுகிறது.
தைவானை தனது ஒரு பகுதி என்று கூறி வரும் சீனா, அதனைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்று வருகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தைவான் அதிபர் சாய் இங்வென், "தைவான் ராணுவ மோதலை விரும்பவில்லை. அது அண்டை நாடுகளுடன் அமைதியான, நிலையான உறவில் நம்பிக்கை கொண்டுள்ளது.
"ஆனால் தனது சுதந்திரம், ஜனநாயகத்தைப் பாதுகாக்க தைவான் எதை வேண்டுமானாலும் செய்யும்," என்றார் அவர்.