இஸ்லாமாபாத்: பாகிஸ்தானை அணுவாயுத நாடாக மாற்றிய விஞ்ஞானி திரு அப்துல் காதர் கான் (படம்) மரணமடைந்துவிட்டதாக பாகிஸ்தானிய அதிகாரிகள் நேற்று அறிவித்தனர்.
அவருக்கு 85 வயது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பாகிஸ்தானிய ஊடகம் தெரிவித்தது.
கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டது.
தேசிய வீரராக திரு கானை பாகிஸ்தான் கருதுகிறது. ஆனால் சர்வாதிகாரிகளால் ஆளப்படும் நாடுகளுக்கு அணுவாயுதங்களைத் தயார் செய்வதற்கான தொழில்நுட்பத்தை அனுப்பிவைத்த ஆபத்தான
வராக திரு கானை மேற்கத்திய நாடுகள் பார்க்கின்றன.
திரு கானின் மரணம் தம்மை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தி இருப்பதாக பாகிஸ்தானிய அதிபர் அரிஃப் ஆல்வி தெரிவித்தார். ஈரான், லிபியா, வடகொரியா ஆகிய நாடுகளுடன் அணுவாயுதத் தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொண்டதை திரு கான் ஒப்புக்கொண்டதை அடுத்து, 2004ஆம் ஆண்டில் அவர் தலைநகர் இஸ்லாமாபாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
2006ஆம் ஆண்டில் அவருக்குப் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் குணம் அடைந்தார். 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அவரது வீட்டுக் காவல் முடிவுக்கு வந்தது.
இருப்பினும் அவருக்குப் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.