பெய்ஜிங்: சீனாவின் வடக்கு ஷாங்ஸி மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் 1.75 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுவாக வறண்ட பகுதியாக காணப்படும் இப்பகுதியில் மூன்று மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே வாரத்தில் கொட்டித் தீர்த்துவிட்டது.
சீனாவில் அதிக நிலக்கரி உற்பத்தி செய்யும் பகுதிகளில் ஒன்றான அங்கு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக கிட்டத்தட்ட 60 நிலக்கரி சுரங்கங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.
ஆனால் தற்போது நான்கு சுரங்கங்களைத் தவிர மற்ற அனைத்தும் வழக்கமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக உள்ளூர் அவசரநிலை நிர்வாக அதிகாரி வாங் கிருய் கூறினார்.
ஷாங்ஸி மாநிலத்தில் பெய்த மழை, வெள்ளம் காரணமாக ஏறக் குறைய 19,000 கட்டடங்கள் சேதமடைந்துவிட்டதாகவும் மேலும் 18,000 கட்டடங்கள் மோசமாக சேதமடைந்துவிட்டதாகவும் அவர் சொன்னார்.
"இதனால் கிட்டத்தட்ட 1.75 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டு
உள்ளனர். 120,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
"இவர்களைத் தவிர 15 பேர் மாண்டுவிட்டனர். மூவரைக் காணவில்லை," என்றும் அவர் சொன்னார்.
நீடித்த மழை, புயல், மீட்புப் பணிகளுக்கு இடையூறாக உள்ளதாக சீனாவின் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கிட்டத்தட்ட 190,000 ஹெக்டர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமடைந்துவிட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
ஷாங்ஸியில் அக்டோபர் 2 முதல் 7ஆம் தேதி வரை 119.5 மி.மீ. மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியது.
நிலக்கரி தட்டுப்பாடு, மின்சார, நிலக்கரி விலை உயர்வு, மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில், இந்த மழை அதை மேலும் மோசமாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இவ்வாண்டு சீனா முழுவதும் பல பகுதிகளில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்து மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது.
சென்ற ஜூலை மாதம் ஹெனான் மாநிலத்தில் பெய்த அதிதீவிர கனமழைக்கு ஏறக்குறைய 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.