பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள மதுக்கூடங்கள் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றன. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த இந்நகரில் ஏழு மாதங்களுக்கு மதுத்தடை விதிக்கப்பட்டதால் இந்நிலை உருவாகியுள்ளது.
'நைட்லைஃப்' எனப்படும் இரவு நேரக் கேளிக்கை நடவடிக்கைகளுக்குப் பிரபலமாக இருந்த பேங்காக்கில் தற்போது வர்த்தகர்கள் தங்களின் மதுக்கூடங்களைத் தொடர்ந்து இயக்க சிரமப்படுகின்றனர். சிலர் மதுபானங்களுக்குப் பதிலாக 'மொக்டெயில்' எனப்படும் மாதிரி மதுபானங்களைத் தயார்செய்யும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.
தாய்லாந்தில் இதுவரை 1.7 மில்லியன் பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பிரபல இரவு கேளிக்கை கூடங்களுடன் தொடர்புடைய கிருமிப் பரவல் குழுமம் உருவானதைத் தொடர்ந்து மதுத்தடை விதிக்கப்பட்டது.
தற்போது மதுக்கூடங்கள் இயல்புநிலையில் இருந்ததில் சுமார் 60 விழுக்காட்டு வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன. சில, சிறிதளவில் போதை தரக்கூடிய 'க்ராத்தொம்' இலையைக் கொண்டு மாதிரி மதுபானங்களைத் தயார்செய்து வழங்குகின்றன. எனினும், மதுபானத்தைக் காட்டிலும் 'மொக்டெயில்' பானத்தின் விலை பாதிக்கும் குறைவு. இணையத்தில் மதுபானம் விற்பதற்கும் தடை பொருந்தும். சில வர்த்தகர்கள் விதிமுறைகளை மீறுகின்றனர். அவ்வாறின்றி சரியாக நடந்துகொள்வோர் பெரிதும் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.
கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் விதிக்கப்பட்ட மிகக் கடுமையான பயணத் தடைகள் சுற்றுப்பயணத்துறையைப் பெரிதும் நம்பியிருக்கும் தாய்லாந்தின் பொருளியலை சீர்குலைத்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 40 மில்லியன் சுற்றுப்பயணிகள் இந்நாட்டிற்குச் சென்றுவந்தனர். இந்த எண்ணிக்கை இப்போது நினைத்துப் பார்க்கமுடியாத அளவு குறைந்துள்ளது.