லிவர்ப்பூல்: தோற்கும் நிலையிலிருந்து மீண்டுவந்து நான்கு கோல்களை அடித்து எவர்ட்டனைத் திக்குமுக்காடச் செய்தது வாட்ஃபர்ட். 5-2 கோல் கணக்கில் வாட்ஃபர்ட் ஆட்டத்தை வென்றது.
ஆட்டத்தின் 78வது நிமிடத்தில்தான் வாட்ஃபர்ட் கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தியது. அதற்குப் பிறகு ஆட்டம் முடியும் வரை பொழிந்தது கோல் மழை.
ஐந்தில் மூன்று கோல்களை அடித்தவர் முன்னாள் எவர்ட்டன் விளையாட்டாளர் ஜோஷுவா கிங்.
புதிய நிர்வாகி கிளாவ்டியோ ரனியேரியின் தலைமையில் முதன்முறையாக வெற்றிகண்டது வாட்ஃபர்ட். இனி இந்த பிரிமியர் லீக் பருவத்தில் சிறப்பாக ஆடமுடியும் என்ற நம்பிக்கை இவ்வணிக்குப் பிறந்துள்ளது.
மற்றோர் ஆட்டத்தில் பிரைட்டனை 4-1 எனும் கோல் கணக்கில் வென்றது லீக்கின் நடப்பு வெற்றியாளர் அணியான மான்செஸ்டர் சிட்டி. முற்பாதியாட்டத்தில் சிட்டி 3-0 எனும் கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது. பிற்பாதியில் பிரைட்டன் விட்டுக்கொடுக்காமல் விளையாடியபோதும் சோபிக்கவில்லை.
நோரிச் சிட்டியை 7-0 எனும் கோல் கணக்கில் வதம் செய்தது செல்சி. ஏழு கோல்களில் மூன்றை அடித்தவர் அடுத்த நட்சத்திரமாக உருவெடுத்து வரும் மேசன் மவுன்ட். நேற்றிரவு நிலவரப்படி லீக் பட்டியலில் செல்சி முதலிடத்தில், நோரிச் கடைசி இடத்தில். மான்செஸ்டர் சிட்டி இரண்டாம் இடத்தை வகிக்கிறது.