இஸ்தான்புல்: தாங்கள் வாழைப்பழம் சாப்பிட்டதைக் காணொளியாகப் பதிவுசெய்து, அதைச் சமூக ஊடகத்தில் வெளியிட்டதால் சிரிய நாட்டு அகதிகள் குறைந்தது எழுவர் துருக்கியில் இருந்து நாடுகடத்தப்பட உள்ளனர்.
“அகதிகளுக்கு வாழைப்பழம் கிடைக்கிறது, எனக்குக் கட்டுப்படியாகவில்லை,” என்று துருக்கியர் ஒருவர் புகார் அளித்ததே இதற்குக் காரணம்.
“நீங்கள் வசதியாக வாழ்கிறீர்கள். என்னால் வாழைப்பழம் தின்ன முடியவில்லை. நீங்கள் கிலோ கணக்கில் வாங்கிச் சாப்பிடுகிறீர்கள்,” என்று துருக்கிய ஆடவர் ஒருவர், 17 வயது சிரிய மாணவியைச் சாடினார்.
அவருடன் சேர்ந்துகொண்ட இன்னொரு துருக்கியர், சிரிய அகதிகள் நாடு திரும்பி சண்டை போடாமல் துருக்கியில் வசதியாக வாழ்வதாகக் குற்றஞ்சாட்டினார்.
தங்களுக்கு வேறு புகலிடம் இல்லை என்று அம்மாணவி கூறியதை அவர்கள் செவிமடுக்கவில்லை.
இந்தக் காணொளி, இம்மாதம் 17ஆம் தேதி இஸ்தான்புல் நகரில் எடுக்கப்பட்டது.
இந்நிலையில், தனது மக்களிடத்தில் காணப்படும் குடியேறி எதிர்ப்பு மனப்போக்கைக் கட்டுப்படுத்த துருக்கிய அரசு முயன்று வருகிறது.
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போர் காரணமாக அந்நாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட நான்கு மில்லியன் பேர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.