பெய்ஜிங்: சீனாவில் மூன்று மாதங்களில் ஆக அதிக கொவிட்-19 தொற்று பாதிப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, பெய்ஜிங்கில் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவில் இன்று புதன்கிழமை புதிதாக 93 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. ஆகஸ்ட் 9ஆம் தேதிக்குப் பிறகு பதிவான ஆக அதிகமான எண்ணிக்கை இது.
சென்ற மாதப் பிற்பகுதியில் இருந்து சீனாவில் ஒவ்வொரு நாளும் கிருமிப் பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. பிற நாடுகளோடு ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், கிருமித்தொற்றை முற்றிலும் ஒழிக்கும் கொள்கையைக் கொண்டிருக்கும் சீனா, அதைக் கட்டுப்படுத்த மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், தொடக்கப் பள்ளி ஊழியர் ஒருவர்க்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்திற்குள் வைத்து பூட்டப்பட்டதாக ‘பிபிசி’ செய்தி கூறுகிறது.
உடனடியாக அவர்களுக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 7 முதல் 12 வயதிற்குட்பட்ட அம்மாணவர்கள் பரிசோதனை முடிவு வரும்வரை வீடு திரும்ப அனுமதிக்கப்படாததால், அவர்கள் அன்றிரவைப் பள்ளிக்கூடத்திலேயே கழித்தனர்.
அவர்களில் சிலரைத் தனிமைப்படுத்த வேண்டியிருப்பதாக பள்ளித் தலைமையாசிரியர் பெற்றோர்களிடம் கூறினார். கிட்டத்தட்ட 35 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சி தெரிவித்தது.
ஷங்ஹாயில் ஓரிரு நாட்களுக்குமுன் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதால், டிஸ்னிலேண்ட் கேளிக்கைப் பூங்காவிற்குச் சென்றவர்கள் அனைவரும் அதற்குள்ளேயே வைத்து பூட்டப்பட்டனர். பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.