பிரசல்ஸ்: ஜெர்மனியில் வரும் குளிர்காலத்தில் அனைவரும் நோயெதிர்ப்பை அடைந்துவிடுவார்கள் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் கூறியுள்ளார்.
குளிர்காலம் முடிவுறும்போது ஜெர்மனியில் கிட்டத்தட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கலாம் அல்லது கிருமித்தொற்றில் இருந்து மீண்டிருக்கலாம் அல்லது மாண்டுவிடுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
பெர்லினில் நடந்த செய்தி யாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், "நோயெதிர்ப்பை அடைந்து விடுவோம். ஆனால் எந்த வழியில் அதை அடைய போகிறோம் என்பதுதான் கேள்வி. தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலமா அல்லது கிருமித்தொற்றுக்கு ஆளாவதன் மூலமா? "தடுப்பூசி போட்டுக்கொண்டு நோயெதிர்ப்பு அடை வதைத்தான் நாங்கள் பரிந்துரைக்கிறோம்," என்றார்.
கிருமிப் பரவல் மோசமடைந்து வரும் நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் ஜெர்மனி அரசாங்கம் மக்களை வலியுறுத்தி வருகிறது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி முந்தைய ஏழு நாட்களில் 100,000 பேருக்கு கிட்டத்தட்ட 400 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இது முந்தைய கிருமித்தொற்று காலத்தில் இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகம். ஒரு சில பகுதிகளில் அந்த எண்ணிக்கை 650 மற்றும் 1,000ஆகவும் உள்ளது.
இந்நிலையில், முடக்கநிலை உட்பட எந்தவொரு கட்டுப்பாடும் வேண்டாமென்று தவிர்க்கக்கூடிய சூழ்நிலையில் நாம் இல்லை என்றும் ஸ்பான் சொன்னார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒரு வாரத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இந்நிலையில், கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சில ஐரோப்பிய நாடுகளில் முடக்கநிலை, கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதேசமயம் அவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனிடையே, பிரஞ்சுப் பிரதமர் ஸான் காஸ்டெக்ஸுக்குக் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர் 10 நாள் தன்னை தனிமைப்படுத்திக்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெர்மனி, டென்மார்க் நாடுகளுக்குப் பயணிக்க வேண்டாம் என்று தன் குடிமக்களுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.