சோல்: தென்கொரியாவில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாட்டினருக்கான கட்டுப்பாடுகள் நேற்று முதல் கடுமையாக்கப்பட்டது.
இதன்படி தென்கொரியாவில் வசிக்கும் வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கும் மதுபானக்கூடங்களுக்கும் செல்வதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுஇருந்தது.
அதேசமயம் வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட கொரிய குடிமக்களுக்கு இந்த தடை பொருந்தாது.
ஆனால் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தென்கொரியாவிற்குள் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டினரைத் தவிர மற்றவர்கள் இத்தடைக்கு உட்பட வேண்டும்.
தென்கொரியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்குவதற்கு முன், வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி வெளிநாட்டுத் தூதரகங்கள் கவலையடைந்திருந்தாலும் இத்தடையை நீக்குவதற்கான அவர்களின் முயற்சியால் எந்த முன்னேற்றமும் இல்லை.
"வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட கொரிய குடிமக்களையும் வெளிநாட்டினரையும் சமமாக நடத்தவேண்டும் என்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்," என்று ராய்ட்டர்சிடம் சோலில் உள்ள பிரிட்டிஷ் தூதரக செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் பர்ன்ஸ் சொன்னார்.
இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆஸ்திரேலிய தூதரகமும் தெரிவித்தது.
ஆனால், தென்கொரிய நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு மையமோ, இந்நடவடிக்கை காரணமாக மிகவும் குறைவானவர்களே பாதிக்கப்படுவார்கள் என்கிறது.
ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தனியாக அமர வேண்டும் என்பதைத் தவிர, அவர்கள் உணவகங்களுக்குச் செல்ல எந்த தடையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.