லண்டன்: பிரிட்டன் செல்லும் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் இனி பயணத்திற்கு முந்திய கொவிட்-19 பரிசோதனை செய்ய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் கிருமித்தொற்று சம்பவங்களால் விமான நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தத் தளர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்கூட்டிய பரிசோதனை தேவையில்லை என்றாலும் இங்கிலாந்திற்குச் சென்ற இரண்டு நாட்களில் கிருமித்தொற்று பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமாகும், ஆனால் அதிக செலவுமிக்க 'பிசிஆர்' பரிசோதனை செய்ய வேண்டியதில்லை என்று பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.
அதுபோல் கிருமித்தொற்று உறுதி செய்யப்படாதவர்கள் இனி தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் தேவையில்லை.
இந்த புதிய தளர்வுகள் இன்று முதல் நடப்புக்கு வரும் என்று ஜான்சன் சொன்னார்.
ஓமிக்ரான் பரவலால் மீண்டும் கொண்டு வரப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது விமான நிறுவனங்களுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் உள்ளதாக விமான நிறுவனங்கள் கூறின.
இருப்பினும், இங்கிலாந்திற்குச் சென்ற பிறகு எடுக்க வேண்டிய ஆன்டிஜென் பரிசோதனையையும் நீக்குமாறு ஈஸிஜெட் தலைமை நிர்வாக அதிகாரி பிரிட்டிஷ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
பிரிட்டனில் கிருமித்தொற்று சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளைச் சமாளிப்பதற்கு ஏதுவாக உள்ளூர் கிருமித்தொற்று பரிசோதனை விதிகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதன்படி விரைவு ஆன்டிஜென் பரிசோதனையில் தொற்று இருப்பது தெரியவந்தால், அதை உறுதிப்படுத்திக்கொள்ள 'பிசிஆர்' பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை என்று பிரிட்டன் சுகாதாரத் துறை கூறியுள்ளது.
பிரிட்டனில் சென்ற வாரம் 20 பேரில் ஒருவருக்குக் கிருமித் தொற்று உறுதிசெய்யப்பட்டதாக தரவுகள் காட்டுகின்றன.
இதற்கிடையே, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து செல்லும் விமானங்களுக்கு ஹாங்காங் இரண்டு வார காலத் தடை விதித்துள்ளது.