வாஷிங்டன்: ஒரே ஒரு தற்கொலையாளிதான் காபூல் தாக்குதலை நடத்தியிருக்கிறார் என்று அமெரிக்க தற்காப்பு அமைச்சின் விசாரணையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை தலிபான் படையினர் கைப்பற்றியபோது குழப்பமும் அமளியும் ஏற்பட்டது. அமெரிக்கப்படைகள் அவசரமாக வெளியேறிக் கொண்டிருந்த சமயத்தில் காபூல் விமான நிலையத்துக்கு வெளியே குண்டு வெடித்தது.
இதில் 13 அமெரிக்கர்கள் உட்பட 173 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்டது.
இந்த நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய அமெரிக்க அதிகாரிகள், ஒரே ஒரு தற்கொலையாளி தான் தாக்குதலை நடத்தியிருக்கிறார் என்று தெரிவித்தனர்.
ஒருவருக்கு மேல் யாரும் தாக்குதலில் ஈடுபடவில்லை என்று அவர்கள் கூறினர்.
"துப்பாக்கியால் சுட்டு யாரும் உயிரிழக்கவில்லை. தற்கொலையாளியின் குண்டு வெடித்த தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டது," என்று விசாரணை அறிக்கையை வெளியிட்ட பிரிகேடியர் ஜெனரல் லான்ஸ் கர்டிஸ் நேற்று தெரிவித்தார்.