தனது உணவுப் பட்டியலில் புதுப்புது அம்சங்களைச் சேர்ப்பதில் பெயர் போனது மெக்டானல்ட்ஸ் சீனா.
அந்த வகையில், அதன் பிரபல ‘ஐஸ்கிரீம் சண்டே’வில் கொத்தமல்லியைச் சேர்த்துள்ளது அந்நிறுவனம்.
இந்தப் புதுவரவைப் பற்றி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் பயனாளர் டேனியல் அகமது என்பவர்.
இந்த டுவிட்டர் பதிவு திங்கட்கிழமை (பிப்ரவரி 21) வெளியானது. இதுவரை இப்பதிவிற்கு 2,000க்கு மேற்பட்ட விருப்பக்குறிகள் கிடைத்துள்ளன.
டுவிட்டர் பயனாளர்களிடம் இருந்து இப்பதிவிற்கு மாறுபட்ட கருத்துகள் வந்துள்ளன. கொத்தமல்லி ஐஸ்கிரீமை தங்களுக்குப் பிடிக்காது என்று பலர் கருத்து கூறாவிட்டாலும், இந்தக் கலப்பு குறித்து அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
குறிப்பிட்ட காலத்திற்கு விற்கப்படும் இந்தக் கொத்தமல்லி ‘ஐஸ்கிரீம் சண்டே’ 6.6 யுவானுக்கு (S$1.40) விற்கப்படுவதாக மெக்டானல்ட்ஸ் சீனாவின் அதிகாரபூர்வ இணையப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாக, இந்தியர்கள் சமையலில் கொத்தமல்லியைப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், சீனாவில் உள்ள மெக்டானல்ட்ஸ் உணவகங்கள் அதை ஐஸ்கிரீமில் தூவி விற்பனை செய்வது புதுமையாக உள்ளது என்கின்றனர் இணையவாசிகள்.
சிங்கப்பூரில் உள்ள மெக்டானல்ட்ஸ் உணவகங்களில் சாக்லட், ஸ்ட்ராபெரி ‘ஐஸ்கிரீம் சண்டே’ பொதுவாக $1.90க்கு விற்கப்படுகிறது.