உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே அதிகரித்துவரும் பதற்றம் குறித்து அண்மைய நிலவரத்தைத் தெரிந்துகொள்ள உலகம் முழுவதும் மக்களின் கவனம் செய்தி ஒளிவழிகள் பக்கம் திரும்பியுள்ளது.
திறமையுடைய செய்தியாளர்கள், இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர்.
அந்த வகையில், பல மொழிகளில் ஆற்றல் உடைய நிருபர் ஒருவர், உக்ரேன் நிலவரம் குறித்து தங்குதடையின்றி ஆறு மொழிகளில் பேசியிருப்பது இணையவாசிகளைப் பிரம்மிக்க வைத்துள்ளது.
உக்ரேனியத் தலைநகர் கீவில் இருந்து செய்தி வழங்கிய இந்த நிருபர் ஆங்கிலம், ஸ்பானிய, போர்ச்சுகீசிய, பிரெஞ்சு, ஜெர்மானிய, லக்சம்பர்க் நாட்டு மொழிகளில் சரளமாக பேசினார்.
இவர் பேசுவதைக் காட்டும் காணொளி ஒன்று டுவிட்டரில் திங்கட்கிழமை (பிப்ரவரி 21) பதிவேற்றம் செய்யப்பட்டது. இதுவரை அது 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
ஏபி செய்தி நிறுவனத்திற்காக பணிபுரியும் ஃபிலிப் கிரவ்தர் எனும் இந்த நிபுணர், லக்ஸம்பர்க் நாட்டைச் சேர்ந்தவர். அமெரிக்க அரசதந்திரம், வெளிநாட்டுக் கொள்கை, அரசியல், நடப்பு விவகாரம் உள்ளிட்டவை குறித்து இவர் செய்தி வழங்கி வருகிறார்.