மெல்பர்ன் நகரின் லிட்டில் இந்தியா பகுதி அமைந்திருக்கும் டன்டெனோங் வட்டாரம் புதுப்பொலிவு பெறவுள்ளது.
ஆனால் அங்குள்ள எல்லா இந்திய வர்த்தகர்களுக்கும் அது நல்ல செய்தியாக இருக்கவில்லை.
வேகமாக வளர்ந்து வரும் டன்டெனோங் வட்டாரத்தை மேம்படுத்தும் திட்டத்தை, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
அங்கு புதிய அடுக்குமாடி வீட்டுக் கட்டடங்கள், கடைத்தொகுதிகள், அலுவலக வளாகங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டுவது திட்டம்.
2023ஆம் ஆண்டு தொடங்கும் மேம்பாட்டுப் பணி, 18 ஆண்டுகளுக்கு நீடிக்கும்.
பல்லாயிரம் வேலைகளை அது உருவாக்கும் என்றும் அரசாங்கம் கூறுகிறது.
அதில் முதல் கட்டமாக டன்டெனோங் வட்டாரத்தில் உள்ள லிட்டில் இந்தியா பகுதி மேம்படுத்தப்பட உள்ளது.
பல கலாசாரத்தினர் வாழும் மெல்பர்ன் நகரத்தில் பல இனத்தவர்கள் அதிகமாக கூடி வாழும் இடங்களில் ஒன்று டன்டெனோங்.
அங்கு 12,000க்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய உணவுப் பொருள்கள், இந்திய ஆடை அணிகலன்கள், உணவகங்கள் போன்றவை அங்கு அதிகம் அமைந்துள்ளன.
இருப்பினும் அங்குள்ள இந்திய வர்த்தகர்கள் பலருக்கு மேம்பாட்டுத் திட்டம் கசப்பான தகவலாக அமைந்துள்ளது.
மேம்பாட்டுப் பணிகள் தொடங்கும்போது அங்குள்ள கடைகள் வேறு இடங்களுக்கு பெயர்ந்து செல்ல வேண்டும்; வருமானம் பாதிக்கப்படும்.
பல ஆண்டுகளாக ஒரு சமூகமாக உருவெடுத்து விட்டதாகவும் மற்ற கடைகளைப் பிரிந்து வேறு எங்கோ செல்ல மனமில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மேலும், பணிகள் முடிவடைந்த பின்னர் அதே வட்டாரத்தில் மீண்டும் கடைபோட முடியுமா என்பதும் கேள்விக்குறியே.
கடைவாடகைகள் அப்போது மிகவும் உயர்ந்துவிடும் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.