மேலும் ஒரு தாக்குதலில் 33 பேர் மாண்டனர்
காபூல்: ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் நடந்த குண்டுவெடிப்பில் 30க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
குண்டூஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடந்த இந்தத் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 33 பேர் மாண்டுவிட்டதாக தலிபானின் தலைமை செய்தித் தொடர்பாளர் சொன்னார்.
இத்தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
நான்கு நாள்களில் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட நான்காவது பெரிய தாக்குதல் இது.
வியாழக்கிழமை மட்டும் அந்நாட்டில் 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் குறைந்தது 30 பேர் மாண்டுவிட்டனர்.
வடக்குப் பகுதியில் இருக்கும் மசார்-இ-ஷெரிஃப் நகரத்தில் உள்ள ஷியா பிரிவினரின் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை வேளையில் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதில் 10 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.
குண்டூஸ் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 4 பேரும் கால்ச் பகுதியில் நடந்த குண்டு வெடிப்பில் 10க்கும் அதிகமானோரும் பலியாகினர்.
மேற்கு காபூலில் உள்ள உயர்நிலைப்பள்ளிக்கு அருகில் சென்ற செவ்வாய்கிழமையன்று நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில்
6 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கிடையே, வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் தொடர்புடைய ஐஎஸ் தீவிரவாதியான அப்துல் ஹமீதை தலிபான் படையினர் கைது செய்துள்ளதாக அந்நாட்டின் காவல்துறை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி, தலிபான் இயக்கத்தினர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து அங்கு குண்டுவெடிப்புகள், தற்கொலைப் படைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.