கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இடையில், அங்கு எரிபொருள்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கால்பங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் விலை 20 முதல் 24 விழுக்காடும் டீசல் விலை 35 முதல் 38 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜயசேகரா இதனை தமது டுவிட்டர் பக்கதில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில், மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய ஊக்குவிக்கப்படுவதாகவும் அரசாங்க ஊழியர்கள் தேவைக்கு ஏற்ப அலுவலகத்திற்கு சென்றால் போதும் என்றும் அவர் சொன்னார்.
இலங்கையின் நாணய மதிப்பு பெருமளவில் சரிந்துவிட்டது. இதனால் நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் லிட்டர் ரூ.420, டீசல் ரூ.400 என வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து போக்குவரத்து, இதர சேவை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
எரிபொருள், போக்குவரத்து விலை உயர்வைத் தொடர்ந்து உணவு, பிற பொருள்களின் விலையும் உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்களன்று வெளியிடப்பட்ட அரசாங்க தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் 21.5 விழுக்காடாக இருந்த ஆண்டு பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவில் 33.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து பெட்ரோல் விலை 259 விழுக்காடும் டீசல் விலை 231 விழுக்காடும் உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.