உக்ரேனியப் போரால் மோசமாகப் பாதிக்கப்படுவது மனிதர்கள் மட்டுமல்ல. விலங்குகளும்தான்.
உக்ரேனின் பல பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் ஒயாமல் தாக்குதல்கள் நடத்திவருகின்றன. இதனால் பல பண்ணைகளும் பண்ணை விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன. போர் தொடங்கியதிலிருந்து ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற 15 விழுக்காடு பண்ணை விலங்குகள் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. ஆண்டு இறுதிக்குள் 300,000 வரை பண்ணை விலங்குகள் போரால் கொல்லப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து உக்ரேன் மீது வீசப்படும் குண்டுகளால் பல பண்ணை விலங்குகளுக்கு கால்கள் துண்டிக்கப்படுகின்றன. சில உயிரோடு எரிக்கப்படுகின்றன. கடுமையான காயங்கள் உள்ள கால்நடைகளைக் கொல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வாறு செய்வது மிகவும் வேதனையாக இருந்தாலும், வேறு வழி இல்லை என்கின்றனர் அவர்கள்.
மேலும் உக்ரேனை விட்டு வெளியேறும் பலர் தங்கள் செல்லப் பிராணிகளை விட்டுச்செல்கின்றன. பசியால் தவிக்கும் நாய்கள் முதலில் பிணங்களைச் சாப்பிட்டு கொண்டிருந்ததாகவும், இப்போது அவை ஆட்டுக்குட்டிகள் போன்ற சிறிய கால்நடைகளைத் தாக்கிவருவதாகக் கூறப்பட்டது.