ஹாங்காங்: சீன அதிபர் சி ஜின்பிங், ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 25ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஹாங்காங் செல்கிறார்.
சீன அரசாங்கச் செய்தி நிறுவனமான சின்ஹுவா நேற்று இந்தத் தகவலை வெளியிட்டது.
ஜனவரி 2020ல் கொவிட்-19 கிருமிப்பரவல் ஏற்பட்டதன் பிறகு சீனத் தலைநிலத்திற்கு வெளியே அவர் பயணம் செய்வது இதுவே முதல்முறை. ஹாங்காங்கின் புதிய தலைமை நிர்வாகியாகத் திரு ஜான் லீ பதவியேற்கும் நிகழ்ச்சியிலும் அதிபர் சி கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்தபின் 2019ல் நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டங்கள், தேர்தல் சீர்திருத்த நடைமுறைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஹாங்காங் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 25ஆம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சி சீனாவிற்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரிட்டனின் காலனித்துவ ஆட்சியின்கீழ் 156 ஆண்டுகள் இருந்த ஹாங்காங், 1997 ஜூலை 1ஆம் தேதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.