கரடுமுரடான பாதைகளைக் கடந்து, வசதிகள் இல்லாத கூடாரத்தில் இரவுகளைக் கழித்து தனது கனவுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார் 24 வயதான விகாஸ் எத்திராஜ். கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக அவர் மேற்கொண்டுள்ள இந்த சாதனைப் பயணத்தின் ஒரு சிறிய அத்தியாயத்தை அவர் அண்மையில் சிங்கப்பூரில் பூர்த்திசெய்தார்.
இந்தியாவில் சென்றாண்டு நவம்பர் 24 அன்று தொடங்கிய அவரது சைக்கிள் பயணம் ஜூன் 19 அன்று சிங்கப்பூரில் நிறைவடைந்தது.
விவேக கைபேசி, புகைப்படக் கருவிகள், ஒலி வாங்கிகள் போன்ற வெவ்வேறு கருவிகளே தனது பயணத்தின் உற்ற நண்பர்கள் என இவர் கருதுகிறார். இவை இல்லையென்றால் தான் இவ்வளவு தூரம் பயணம் செய்திருக்க முடியாது என்று கூறினார் விகாஸ்.
பல நாடுகளைச் சுற்றிவருவதற்கு தொலைபேசியும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பமும் இரண்டு கண்களாக விகாஸுக்கு விளங்குகின்றன.
“இக்காலகட்டத்தில் உலகப் பயணம் மேற்கொள்வது கீள்ளுக்கீரையாகி விட்டது. அந்தக் காலத்திலே பலர் சைக்கிளில் உலகத்தை வலம்வந்தனர். அவர்களிடம் வரைபடம் மட்டுமே இருந்தது. அதுதான் பெரிய சவால். தொழில்நுட்ப உதவியுடம் நான் எளிதில் தொலைந்துபோகமாட்டேன்”, என்றார் தொழில்நுட்பத்தை விரல்நுனியில் வைத்திருக்கும் விகாஸ்.
8,000 கிலோமீட்டர் சக்கரம் மிதித்து பயணம்
விகாஸின் பயணம் சென்றாண்டு நவம்பர் மாதம் அவருடைய பிறப்பிடமான சென்னையில் துவங்கியது. மேடுபள்ளம், மலை, மணல், வயல்பரப்பு, சேறு போன்ற மாறுபட்ட நிலங்களில் பல மாதங்கள் பயணத்துக்கு ஒரு மவுண்டன் சைக்கிளை அவர் தேர்ந்தெடுத்தார்.
இந்தியாவின் பல மாநிலங்களைக் கடந்து நேப்பாளத்தை முதலில் சென்றடைந்தார். மியன்மார், கம்போடியா, வியட்நாம், தாய்லாந்து, மலேசியா என 8,000 கிலோ மீட்டார் அவர் சைக்கிளிலேயே பயணம் செய்தார்.
சிங்கப்பூரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு விமானப் பயணம் மேற்கொண்டு, மீண்டும் அங்கு சைக்கிள் பயணத்தைத் தொடர அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால், அது சாத்தியப்படவில்லை.
“முறையாக ஆய்வு செய்யாமல் பயணத்தைத் தொடங்கி விட்டேன். சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே பயணம் செய்வதற்கான அனுமதியைப் பெற போதிய காலம் இல்லை. நண்பருடைய உதவியுடன் இந்தோனீசியாவின் பாத்தாம் வழியாக சிங்கப்பூருக்கு படகில் வந்தேன். இங்கே என் பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் இந்தியா திரும்புகிறேன்”, என்றார் விகாஸ்.
கனவுக்குக் கைகொடுக்கும் தொழில்நுட்பம்
சிவில் பொறியாளராகப் பணியாற்றிய விகாஸுக்கு உலகைச் சுற்றிவர வெகுநாளாக ஆசை. மற்றவர்கள் செல்லாத பாதையை எடுக்க விரும்பினார். சைக்கிளில் உலகத்தை வலம்வர முடிவெடுத்தார். தனது இலட்சியைத்தை நிறைவேற்ற பணியிலிருந்து விலகினார்.
“என் பெற்றோரால் என் ஆசையை முதலில் புரிந்துகொள்ளமுடியவில்லை. இதை எனது மகிழ்ச்சிக்காகவும் மனதிருப்திக்காவும் மட்டுமே செய்கிறேன் என்று அவர்களால் நினைத்துபார்க்க முடியவில்லை. என் பாதுகாப்புக்கு பயப்பட்டார்கள். எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்றும் எண்ணினார்கள். நான் சளைக்கவில்லை. இறுதியில் எனக்கு விட்டுகொடுத்து, வழி அனுப்பிவைத்தார்கள்”.
பயணத்துக்காக ஓரளவு பணம் சேமித்து வைத்திருந்தாலும், அது நீண்ட காலத்துக்கு போதுமானதாக இருக்குமா என்ற கவலை இருந்தது.
“என் பயணம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தேன். 100,000க்கும் மேற்பட்டவர்கள் என்னை பின்தொடர்கின்றனர். யூ டியூப் தளத்தில் 105,000 பேர் என் காணொளிகளை பார்க்கின்றனர். இதனால் எனக்கு மாதம் 8,000லிருந்து பத்தாயிரம் ரூபாய் ($170) வருமானம் கிடைக்கிறது. சிக்கனமாகச் செலவு செய்வதால் என் அன்றாடச் செலவுகளுக்கு இது போதுமானதாக உள்ளது”.
சின்னசின்ன ஆசை, சைக்கிள் ஓட்ட ஆசை
தனது பயணத்தில் மிகவும் பிடித்த ஒன்றைபற்றி கேட்டபோது, “நான் கடந்த எட்டு மாதங்களாக பல நாடுகளுக்குச் சென்றேன். மொழி தெரியாது, நண்பர்கள் கிடையாது, முன்பின் இந்த நாடுகளுக்குச் சென்றதும் இல்லை. இருப்பினும் நான் சென்ற இடத்தில் எல்லாம், எனக்கு கேட்காமலே உதவி கிடைத்தது. அந்நியர்கள் வீட்டுக்கு அழைத்து சாப்பிட வைத்தார்கள், என்னை போன்று சிக்கனமாக பயணம் செய்தவர்கள் தங்களால் முடிந்து மளிகை பொருள்களை வாங்கி கொடுத்தார்கள். பெயர் தெரியாத சிலர் பணம் கொடுத்தும் உதவினார்கள். உலகத்தில் இன்னும் நன்கை உள்ளது என்று இந்த பயணம் எனக்கு உணர்த்தியது”, என்று பெருமிதத்துடன் கூறினார் விகாஸ்.
“என் வயதில் உள்ளவர்கள் பெரும்பாலோர் நல்ல வேலை கிடைக்கவேண்டும், கைநிறைய சம்பாதிக்கவேண்டும், சொகுசாக வாழவேண்டும் என்று கனவு காண்பார்கள். அதுபோன்ற வாழ்க்கையில் எனக்கு ஆசை இல்லை. நான் பார்த்ததை, அனுபவித்ததை பணம் கொடுத்து பெறமுடியாது. என் வாழ்நாள் வரை இந்த நினைவுகள் என்னுடன் இருக்கும்,” என்றார் விகாஸ்.
பல நாள்கள் வெய்யிலிலும் மழையிலும் சைக்கிள் பயணம் செய்ததில் இவர் களைத்து, கறுத்திருந்து, முகத் தசைகள் இறுகி, கால்களும் கைகளும் வலியால் சோர்வடைந்திருந்தாலும், தனது அடுத்தகட்ட திட்டத்தைப் பற்றி கேட்டபோது அவர் முகத்தில் பளிச்சென்று புன்முறுவல் தொன்றியது.
தற்போது சென்னையில் ஓய்வு எடுத்து வரும் விகாஸ் இவ்வாண்டுக்குள் ஆஸ்திரேலியாவை வலம்வர திட்டமிட்டு வருகிறார்… சைக்கிளில்தான்.