இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்புவார் என நம்பப்படுகிறது. அவர் இலங்கையை இன்று சென்றடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை இலங்கை அரசாங்க பேச்சாளர் ஒருவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் உறுதிபடுத்தினார். கொழும்பில் அரசாங்கத்தால் அளிக்கப்படும் வீட்டில் அவர் தங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
திரு ராஜபக்சே நாடு திரும்பினால் ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் மூளக்கூடும். அதை கட்டுப்படுத்தி சட்ட ஒழுங்கை நிலைநாட்ட புதிய அதிபர் ரணில் விக்ரமசிங்கே நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களிலிருந்து தப்பிக்க ஜூலை மாதம் ராஜபக்சே நாட்டைவிட்டு வெளியேறினார். மாலத்தீவுகளிலிருந்து அவர் சிங்கப்பூர் வந்தடைந்தார். ஜூலை 14 அன்று அவர் அதிபர் பதவியிலிருந்து விலகினார். ஆகஸ்ட் மாதம் அவர் சிங்கப்பூரிலிருந்து தாய்லாந்து சென்றார்.
கடந்த பல வாரங்களாக திரு ராஜபக்சே எப்போது நாடு திரும்புவார் என்று இலங்கை ஊடகங்கள் ஊகித்துவருகின்றன. ஒரு முன்னாள் அதிபருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பும் சலுகைகளும் வழங்கப்பட்டால், நாடு திரும்பி சேவையாற்ற விரும்புவதாக திரு ராஜபக்சே முன்னதாக குறிப்பிட்டுள்ளார்.