கொழும்பு: இலங்கையிலிருந்து தப்பியோடி, கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாடு திரும்பிய முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு தற்போதைய அரசாங்கம் அதிகாரபூர்வ இல்லத்தையும் பாதுகாப்பையும் வழங்கி உள்ளது.
நேற்று முன்தினம் இரவு இலங்கையின் கொழும்பில் உள்ள பண்டாரநாயகா அனைத்துலக விமான நிலையத்தை அடைந்த கோத்தபாயவுக்கு அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அரசாங்க இல்லத்திற்குச் சென்ற கோத்தபாய, பாதுகாப்பு கருதி அறையை விட்டுச் செல்வதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.
கோத்தபாயவைப் பார்ப்பதற்கு நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் சென்றனர். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் தமது தம்பியான கோத்தபாயவை நேரில் சென்று பார்த்தார்.
இந்நிலையில், கோத்தபாயவை அரசாங்கம் கைது செய்ய வேண்டும் என்று இலங்கை ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
பொருளியல் சரிவு காரணமாக கொந்தளித்த மக்கள், அதிபர் மாளிகையை சூழ்ந்தவுடன் கோத்தபாய ஜூலை 13ஆம் தேதி மாலத்தீவுக்குத் தப்பிச் சென்றார்.
அங்கிருந்து சுற்றுப்பயண விசா வில் சிங்கப்பூர் வந்த அவர், பிறகு பேங்காக் சென்றார். இப்போது நாடு திரும்பியுள்ள அவர், அரசியல்வாதிகளிடமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றுள்ளார்.