பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலை நடத்த ஒரு பில்லியன் ரிங்கிட்டுக்கு மேல் செலவாகும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையத்தின் தலைவர் அப்துல் கனி சாலே தெரிவித்துள்ளார்.
"தேர்தலுக்கான செலவு ஏறத்தாழ 1.1 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகும்," என்று திரு அப்துல் கனி கூறினார். 'தி ஸ்டார்' நாளிதழுடன் நடந்த நேர்காணலில் அவர் இவ்வாறு சொன்னார்.
மலேசியாவில் முந்தைய பொதுத் தேர்தல் 2018ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கு செலவான தொகையில் இரு மடங்கிற்கும் அதிகமாக அடுத்த பொதுத் தேர்தலுக்கு செலவாகும் என்று அவர் குறிப்பிட்டார். சென்ற பொதுத் தேர்தலுக்கு சுமார் 500 மில்லியன் ரிங்கிட் தொகை செலவானது.
மேலும், அடுத்த பொதுத் தேர்தலுக்கான செலவு, 2013ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு செலவான தொகையில் கிட்டத்தட்ட மும்மடங்காக இருக்கும் என்றும் அவர் சுட்டினார்.
மலேசியாவில் வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு மனிதவளம் உட்பட கூடுதல் வளங்கள் தேவைப்படுகின்றன.
அதனால் இம்முறை செலவு அதிகரிக்கும் என்று திரு அப்துல் கனி சொன்னார்.
மலேசியாவில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21லிருந்து 18க்குக் குறைக்கப்பட்டது. அதோடு, அந்த காலகட்டத்தில் வாக்களிப்போர் பதிவுசெய்வதற்கான தானியக்க முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இத்தகைய காரணங்களால் மலேசியாவில் வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சுமார் 366,000 பேர் தேவைப்படுகின்றனர். சென்ற பொதுத் தேர்தலில் 260,000 பேர் மட்டுமே தேவைப்பட்டனர்.
அடுத்த பொதுத் தேர்தலுக்குக் கூடுதல் வாக்களிப்பு நிலையங்கள் உள்ளிட்டவை தேவைப்படும் என்றும் திரு அப்துல் கனி தெரிவித்தார். சென்ற பொதுத் தேர்தலில் இருந்ததைக் காட்டிலும் கூடுதலாக 550 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
மலேசியாவில் பொதுத் தேர்தலை நடத்த அதிகம் செலவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது