இந்தோனீசியாவின் பாலித் தீவில் நடைபெற்றுவரும் ஜி20 மாநாடுகளின் அங்கமாக பி20 எனும் உலக வர்த்தகத் தலைவர்களின் உச்சநிலை மாநாடு நடைபெற்றது.
இரண்டு நாள்கள் நடந்த பி20 உச்சநிலை மாநாட்டில் இன்று கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர்.
உலகளவில் வர்த்தகங்கள் எதிர்நோக்கும் முக்கிய சவால்கள் குறித்து ஜி20 அமைப்பிடம் கொள்கை அளவிலான பரிந்துரைகளை முன்வைக்க இந்த பி20 ஏற்படுத்தப்பட்டது. ஜி20ன் வர்த்தகப் பிரிவாக வர்ணிக்கப்படும் இந்த அமைப்பின் உச்சநிலை மாநாட்டில் 3,300 பேர் கலந்துகொண்டனர். உலகத் தலைவர்கள், தலைமை நிர்வாக அதிகாரிகள், 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் தலைவர்கள் என பலதரப்பினரும் கலந்துகொண்டனர். டெஸ்லா, டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் இணையம் வழி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அண்மையில் டுவிட்டரை வாங்கிய அவர், அந்தத் தளத்தில் இன்னும் அதிகமான காணொளிகளையும் நீளமான காணொளிகளையும் பதிவிட ஆதரவளிக்கப்போவதாகத் தெரிவித்தார். அவ்வாறு செய்வதால் காணொளி தயாரித்து பணம் ஈட்டும் சமூகத்தினர் இந்தத் தளம் மூலமும் வாழ்வாதாரத்தை ஏற்படுத்த அந்தத் தளம் வகைசெய்யும் என்று கூறினார்.
புத்தாக்கத்தை விரிவுபடுத்துவது, அனைவரும் உள்ளடக்கிய, ஒத்துழைப்புடனான வளர்ச்சி என்ற கருப்பொருளில் உச்சநிலை மாநாடு நடைபெற்றது.
வர்த்தகமும் முதலீடும், எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மையும் பருவநிலையும், நிதியும் உள்கட்டமைப்பும், எதிர்கால வேலைகளும் கல்வியும், நேர்மையும் கட்டுக்கோப்பும், வர்த்தகத்தில் மகளிர் போன்ற முக்கிய கொள்கை அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
உச்சநிலை மாநாட்டின் முடிவில் பி20 தலைமைத்துவம் அடுத்த ஜி20 தலைமைத்துவத்தை ஏற்கும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ உச்சநிலை மாநாட்டின் முடிவில் உரையாற்றினார்.
பி20 உச்சநிலை மாநாட்டில் மூன்று அம்சங்களில் 25 பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. நோய்ப் பரவலுக்குப் பிந்தைய காலத்தில் புத்தாக்கத்தைத் தழுவி வளர்ச்சியை முடுக்கிவிடுவது, சிறிய, நடுத்தர நிறுவனங்களையும் எளிதில் ஆபத்துக்குள்ளாகக் கூடிய குழுக்களையும் மேம்படுத்துவது, வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த ஆதரிப்பது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தப்படும்.