கோலாலம்பூர்: மலேசியாவின் வரலாறு பற்றி எழுதப்போவதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த மலேசியப் பொதுத் தேர்தலில் லங்காவியில் போட்டியிட்ட டாக்டர் மகாதீர் படுதோல்வி அடைந்தார்.
அவருக்கு 6.8 விழுக்காடு வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இதனால் வைப்புத்தொகையையும் அவர் இழந்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்குக் குறைந்தபட்ச 12.5 விழுக்காடு வாக்குகள் கிடைத்தால் மட்டுமே வைப்புத்தொகை திரும்ப கொடுக்கப்படும்.
1969ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் டாக்டர் மகாதீர் தோல்வி அடைந்தார். அதன் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் வெற்றி பெற்ற டாக்டர் மகாதீர், இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.
தேர்தலின் முடிவுகள் தமக்கு மனவேதனையை அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இருப்பினும், மக்களின் விருப்பத்தை ஏற்பதாக அவர் கூறினார்.
தமது பெஜுவான் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அனைவரும் தேர்தலில் தோல்வி அடைந்ததால் நாட்டுக்காக தாம் வகுத்திருந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இயலாது என்றார் டாக்டர் மகாதீர்.
பெஜுவான் கட்சி 125 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது.
மலேசியாவின் அடுத்த பிரத
மராகப் பதவி ஏற்பவர் நாட்டின் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார் அவர்.
இந்நிலையில், மலேசிய வரலாற்றில் பல முக்கிய நிகழ்வுகள் பதிவு செய்யப்படாமல் இருப்பதாக 97 வயது டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
குறிப்பாக, பிரிட்டிஷ் ஆட்சியின்போது நிகழ்ந்த பல நிகழ்வுகளைப் பற்றி பலருக்குத் தெரியாது என்றார் அவர். அவற்றைப் பற்றி எழுதி, புத்தக வடிவில் வெளியிட எண்ணம் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இந்த நூலைப் புனைய விருப்பம் உள்ள கதாசிரியர் தம்மைப் பேட்டி காணலாம் என்றார் டாக்டர் மகாதீர்.