பெய்ஜிங்: சீனா, கடுமையான கட்டுப்பாடுகளுடன் கொவிட்-19 கிருமியை முற்றிலும் ஒழித்துக் கட்டும் இறுக்கமான கொள்கையைக் கைவிட்டுள்ளதால் நாட்டு மக்கள் சுதந்திர உணர்வை அனுபவித்து வருகின்றனர்.
ஆனால் மக்களிடையே கிருமி இன்னும் வேகமாகப் பரவலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. சில நகரங்களில் கிருமிக்கு எதிராக விழிப்புடன் இருக்குமாறு குடியிருப்பாளர்கள் எச்சரிக்கப்பட்டு உள்ளனர். மூன்று ஆண்டுகளாக தொற்று நோயின் பிடியிலிருந்த சீனாவில் அதன் கடுமையான கிருமித் தடுப்பு நடவடிக்கைகளிலிருந்து மீண்டு உலகின் பிற பகுதிகளுடன் இயல்பான வாழ்க்கையை மக்கள் தொடங்கவுள்ளனர்.
தொற்றுநோய் கண்டவர்களை வலுக்கட்டாயமாக அரசு இடங்களில் தனிமைப்படுத்துவது உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளால் வெறுப்படைந்த மக்கள் கடந்த மாதம் நாடு முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இது, 2012ல் அதிபர் ஸி ஜின்பிங் பொறுப்பு ஏற்ற பிறகு நடந்துள்ள மக்களின் மிகப்பெரிய அதிருப்தி சம்பவங்களாகும்.
ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் விதமாக சிலர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகின. அவற்றை பெய்ஜிங் ஆமோதிக்கவோ மறுக்கவோ இல்லாத நிலையில் மக்கள் எதிர்ப்புக்கு அடிபணியும் வகையில் பெய்ஜிங் உள்ளிட்ட பெரிய நகரங் களில் அடுத்தடுத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
மிதமான நோய்த்தொற்று உள்ளவர்கள் வீட்டில் தங்கி சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்று தேசிய சுகாதார ஆணையம், தெரிவித்தது. பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இனி கொவிட்-19 பரிசோதனை தேவை யில்லை என்றும் அது கூறியது. இதன் காரணமாக உள்ளூர் சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கான நுழைவுச்சீட்டு விற்பனை சூடு பிடித்துள்ளது.
இந்த நிலையில் சிலர் தங் களுக்குத் தொற்று இல்லை என்பதைக் காட்டும் பரிசோதனை களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
மற்ற சிலர் எச்சரிக்கையுடன் இருந்து வருகின்றனர்.
“கொவிட்-19 பயங்கரமான நோய் அல்ல என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் தொற்றக் கூடியது. உடல்நிலை பாதிக்கக்
கூடியது,” என்று வெய்போ தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று தெரிவித்தது. “எங்கள் இதயத்தில் ஏற்பட்டு உள்ள அச்சத்தை எளிதில் அகற்ற முடியாது,” என்று அந்தப் பதிவு கூறியது. சீனாவில் நேற்று வரை 21,439 புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது, ஒரு நாள் முன்பு 25,321ஆக இருந்தது.