டெஹ்ரான்: தெருவில் நடனமாடி, அக்காணொளியை இணையத்தில் பதிவேற்றிய இணையருக்கு ஈரான் பத்தாண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இருபது வயதுகளில் இருக்கும் அவ்விணையர் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விடுதலைக் கட்டடத்திற்கு அருகே நடனமாடுவதைக் காணொளி காட்டுகிறது.
நன்னடத்தைக் காவல்படையினரால் கைதுசெய்யப்பட்ட மாஸா அமினி என்ற பெண் உயிரிழந்ததை அடுத்து ஈரானில் போராட்டங்கள் வெடித்தன. அங்கு அப்போராட்டங்களில் பங்குகொண்டு கைதாவோருக்குக் கடும் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், நடனமாடிய இணையருக்கும் ஈரானில் இடம்பெற்றுவரும் போராட்டங்களுக்கும் தொடர்பில்லை எனக் கூறப்படுகிறது.
அவ்விணையர் தங்களது நடனக் காணொளியைத் தங்களது இன்ஸ்டகிராம் பக்கங்களில் பதிவேற்றியதாக ‘பிபிசி’ செய்தி தெரிவிக்கிறது. அவர்கள் இருவரின் இன்ஸ்டகிராம் பக்கங்களையும் ஒட்டுமொத்தத்தில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
ஊழலையும் விபசாரத்தையும் ஊக்குவித்ததாகவும் தேசியப் பாதுகாப்பிற்கு எதிராகச் சதி செய்ததாகவும் அஸ்தியஸ் ஹகிகி, 21 - அமீர் முகம்மது அகமதி, 22, என்ற இணையர்மீதான குற்றச்சாட்டுகள் மெய்ப்பிக்கப்பட்டன.
கைது நடவடிக்கைக்குமுன் ஆடை வடிவமைப்பாளரான குமாரி ஹகிகியின் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.