பெல்ஜியம் செல்வதற்கு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் விமான நிலையத்துக்கு தங்கள் கைக்குழந்தையுடன் தாமதமாக வந்த தம்பதியர் குழந்தைக்கென பயண டிக்கெட் வாங்க வேண்டுமென தெரிந்தவுடன் அந்தக் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டுச செல்ல முயன்றனர்.
பயணப் பெட்டிகள் பரிசோதனை இடத்தில் குழந்தையை விட்டுவிட்டு பாதுகாப்பு பரிசோதனைக்கு விரைந்தனர் அந்தத் தம்பதி. பயணப் பெட்டி பரிசோதனை பகுதியில் விட்டுச் செல்லப்பட்ட கைப்பையில் போர்வையை அகற்றிய விமான நிலைய சிப்பந்திகள் அதில் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அந்தத் தம்பதியர் குழந்தைக்கு பயண டிக்கெட் வாங்க முடியாத நிலையில் இருந்தனரா அல்லது டிக்கெட் வாங்க மனமில்லையா எனக் கூற முடியவில்லை என விமான நிலைய சிப்பந்திகள் தெரிவித்ததாக சிஎன்என் செய்தித் தகவல் விளக்கியது. பின்னர் அந்தத் தம்பதி பயணம் மேற்கொள்ளவிருந்த ரயன்ஏர் விமான சிப்பந்திகள் குழந்தையை வந்து எடுத்துச் செல்லுமாறு கூறிய நிலையில், இஸ்ரேலிய காவல்துறையினரும் அங்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இறுதியில் தம்பதியர் தாங்கள் பயணம் செய்யவிருந்த விமானத்தில் ஏற முடியாமல் போனது. இந்தச் சம்பவம் பற்றிக் கூறும் ரயன்ஏர் விமான சிப்பந்திகள் தாங்கள் கண்டதை நம்ப முடியவில்லை என்று கூறினர்.