ரிச்மண்ட்: அமெரிக்காவின் வெர்ஜினியா மாநிலம், ரிச்மண்டில் நேற்று முன்தினம் உயர்நிலைப் பள்ளி நிகழ்ச்சி முடிந்து வெளியேறிக் கொண்டிருந்த கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கிக்காரன் ஒருவன் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டனர்; ஐவர் காயம் அடைந்தனர்.
சுடப்பட்டவர்களில் ஒருவருக்குத் தெரிந்த 19 வயது சந்தேக ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். வேறு குற்றச்சாட்டுகளுடன், அவர்மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படக்கூடும் என்று செய்தியாளர் சந்திப்பில் ரிச்மண்ட காவல்துறைத் தலைவர் ரிக் எட்வர்ட்ஸ் தெரிவித்தார்.
ஒரேயொருவர் மீதான வாக்குவாதத்துக்காக வெறிச்செயலில் ஈடுபட்ட துப்பாக்கிக்காரனின் நடத்தையை “அருவருப்பானது, கோழைத்தனமானது” என்று திரு எட்வர்ட்ஸ் வர்ணித்தார்.
அந்தத் துப்பாக்கிக்காரன் நான்கு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இறந்தவர்கள் இருவரும் 18, 36 வயதுடைய ஆடவர்கள். அவர்கள் தந்தையும் மகனுமாவர் எனக் கூறப்படும் ஊடகத் தகவல்களை திரு எட்வர்ட்ஸ் உறுதிப்படுத்தவில்லை.
பள்ளிகள், கடைத்தொகுதிகள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் நடைபெறும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களுக்கு அமெரிக்கா பழகிவிட்டது. வெர்ஜினியாவில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு, இவ்வாண்டு இதுவரை அமெரிக்காவில் நடைபெற்றுள்ள 279வது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாகும்.