குடும்ப உறவுகள் ஒரு தனி மனிதரின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தை விவரிக்கும் குறும்படமான ‘ஆவெ மரியா’ (Ave Maria) தேசிய இளையர் திரைப்பட விருதுக்கு (National Youth Film Awards) நியமனம் பெற்றுள்ளது. அத்துடன் டெல்லி அனைத்துலக திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு சிறப்பு அங்கீகாரமும் பெற்றது.
இந்த 24 நிமிட குறும்படத்தை உருவாக்கக் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாகின என்று கூறினார் படத்தின் இயக்குநரான 27 வயது செல்வி ஆன்ட்ரியா ஃபிலாவியா வில்லியம் (Andrea Flavia William).
‘3.1 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர்களின் கைவண்ணத்தில் ஓர் இறுதியாண்டு திட்டப் பணியாக இப்படம் உருவாக்கம் பெற்றது.
தேசிய இளையர் திரைப்பட விருதுக்கு 15 முதல் 35 வயது வரையிலான இளையர்கள் தங்கள் குறும்படங்களை இவ்வாண்டு மே மாதம் சமர்ப்பித்திருந்தனர்.
பொதுப்பிரிவு, ஊடகத்துறை சார்ந்த மாணவர்ப் பிரிவு என இரு பிரிவுகளாக நடத்தப்படும் இவ்விருதுக்கு, இளையர்கள் தாங்கள் இயக்கிய படங்களை அனுப்பியிருந்தனர். ஊடகத் துறை சார்ந்த மாணவர்கள் சமர்ப்பித்தவை 300க்கும் மேற்பட்டவை.
விருது பெறத் தேர்வு செய்யப்பட்டுள்ள மொத்தம் 38 குறும்படங்களில் ஒன்றாக ‘ஆவெ மரியா’ தகுதிபெற்றதைப் பெருமைக்குரிய ஒன்றாகக் கருதுகிறார் இளையர் ஃபிலாவியா.
விருது நிகழ்ச்சி, இம்மாதம் 31ஆம் தேதி நடைபெறும்.