பொதுக் கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத் தேர்வுகளைக் கடந்த வாரம் பெற்றுக்கொண்ட ஹில்குரோவ் உயர்நிலைப்பள்ளி மாணவி நித்யா போயாபதி, 16, பேசுவதற்கு மிகுந்த கூச்சப்படுவார்.
ஆனால், பட்டை தீட்டப்பட்ட இவரது கைகளோ, பலவித கலைப் படைப்புகளைத் தயாரிப்பதில் கைவண்ணத்தைக் காட்டும்.
ஏழு வயதிலிலேயே சிங்கப்பூர் இளையர் விருதுப் போட்டியில் பங்கேற்று பல்குத்தும் குச்சிகளைக் கொண்டு சிற்பம் ஒன்றை உருவாக்கியதற்காக வெள்ளி விருதை இவர் பெற்றார்.
இந்த ஆரம்ப வெற்றி, மேலும் பல போட்டிகளில் பங்கேற்று விருதுகளைப் பெற நித்யாவை ஊக்குவித்தது.
பெரும்பாலும் சாயங்களைக் கொண்டு சித்திரங்களை வரைந்தாலும் மட்பாண்டங்கள், சிற்பங்கள் போன்றவற்றை உருவாக்குவ திலும் நித்யா கைதேர்ந்தவர்.
திறனை மேம்படுத்துவதற்காக வாரத்திற்கு இருமுறை பயிற்சி செய்வதாகக் கூறிய இவர், கலைப் படைப்புகளை உருவாக்குவது தமக்கு மனநிறைவு தருவதாகக் கூறினார்.
ஓவியம் வரையும்போது பிழை ஏற்பட்டால் அல்லது அதில் திருப்தி ஏற்படவில்லை என்றால் அதனை முற்றிலும் புறந்தள்ளி மறுபடியும் தமது முயற்சியை ஆரம்பத்திலிருந்து தொடங்குவதாக நித்யா கூறினார்.
கலைப் படைப்புகளைத் தயா ரிப்பது மட்டுமல்லாது பிறருக்கும் அவற்றை எப்படி உருவாக்குவது என்பது பற்றியும் நித்யா கற்பிக்கிறார்.
உதாரணத்திற்கு, ‘ஒரிகாமி’ கலைப்பொருளை எப்படி செய்வது என ரென் சி மருத்துவமனையில் உள்ள முதியோருக்கு கடந்தாண்டு இவர் கற்பித்தார்.
பாடத்தைப் பொறுத்தவரையில், தனக்கு கணிதப் பாடம் மிகவும் பிடித்திருப்பதாக நித்யா சொன்னார். கலைக்கும் கணக்கறிவு தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
வருங்காலத்தில் நிதித்துறையில் சேர விரும்புவதாகக் கூறிய நித்யா, கணிதப் பாடத்திற்காக ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்வதாகத் தெரிவித்தார்.
ஆயினும், சாதாரண நிலைத் தேர்வில் அப்பாடத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஏ1’ தகுதிக்குப் பதிலாக அடுத்த நிலையான ‘ஏ2’ பெற்றது குறித்து பெரிதும் ஏமாற்றம் அடைந்ததாக இவர் கூறினார்.
ஆங்கில மொழியில் தாம் அதிக முன்னேற்றம் அடைந்ததாக நித்யா கூறியார்.
உயர்நிலை 3ல் ‘சி5’ தகுதி பெற்றிருந்த இவர், சாதாரண நிலைத் தேர்வில் ‘பி3’ பெற்றார்.
பிறரிடம் அதிகம் பேசத் தயங்கும் நித்யா, பாடங்களில் தனக்குச் சந்தேகம் ஏற்படும்போதெல்லாம் ஆசிரியர்களை அணுக முதலில் தயக்கம் காட்டினார்.
ஆனால், சந்தேகங்களைத் தெளிவுபடுத்த வேண்டுமென்றால், தயக்கத்தை விட்டெறிய வேண்டும் என்பதை இவர் உணர்ந்தார்.
“ஆசிரியர்களின் அன்பான அணுகுமுறை எனக்கு ஊக்கத்தைத் தந்தது. வாழ்க்கையில் நல்லது நடக்க வேண்டும் என்றால் முதலில் தயக்கத்தை முற்றிலும் கைவிட வேண்டும்,” என இவர் சொன்னார்.
“நான் இன்னமும் பிறருடன் வெளிப்படையாகப் பேச சிரமப்படுகிறேன். ஆனால் பேசும் திறன் பழகப் பழகத்தான் மேம்படும் என எண்ணுகிறேன்,” என்றார் இவர்.
கல்வியின் அடுத்தகட்ட பயணமாக தொடக்கக் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருக்கும் நித்யா, அங்கேயும் ஓவியக் கலையில் தொடர்ந்து ஈடுபட விரும்புவதாகக் கூறினார்.