உலகளாவிய அளவில் தலைவிரித்தாடும் கொவிட்-19 எனப்படும் கொரோனா கிருமித் தொற்று சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் பாதித்துள்ளது.
பொருளாதார நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இக்கிருமித்தொற்று, சமுதாய ரீதியாகவும் பல மாற்றங்களை ஏற்படுத்திஉள்ளது.
உள்ளூர் இளையர்கள் பல வழிகளில் வாழ்வாதார மாற்றங்களை எதிர்நோக்குகின்றனர்.
அரசாங்கம் பல வழிகளில் வெவ்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் கிருமித்தொற்றைச் சமாளிக்கத் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறது.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பாதிப்புக்குள்ளான இளையர்கள் சவால்மிக்க இந்தக் காலகட்டத்தை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதைச் சற்றுப் பார்ப்போம்.
வீட்டில் இருந்தபடியே புதிய பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு கற்பது, தங்கள் உடல்நலத்தையும் சமூக நலத்தையும் பாதுகாக்கும் வகையில் வெளியே செல்லாமல் இருப்பவர்கள் ஒருபுறம் இருக்க, இளம் வயதிலேயே சுயதொழில் செய்து வாழ்வில் வளர்ச்சி கண்டு வரும்போது பொருளாதார ரீதியில் சரிவை எதிர்நோக்கும் இளையர்களும் கல்வியில் தடை ஏற்பட்டுவிடுமோ எனும் அச்சத்தில் வாழ்வோரும் உள்ளனர்.
இவர்கள் தங்கள் அனுபவத்தைத் தமிழ் முரசுடன் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
தேசிய சேவைக்கு நினைத்தபடி தயார் செய்ய முடியவில்லை
“இம்மாத நடுவில் நானும் எனது நண்பர்களும் பாத்தாமிற்கு விடுமுறைக்காகச் சென்றிருந்தபோது பயண எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. 16ஆம் தேதி இரவு முதல் குறிப்பிட்ட நாடு
களிலிருந்து திரும்புவோர் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்என்று தெரிவிக்கப்பட்டது.
“அந்தப் பட்டியலில் ஆசியான் நாடுகளும் இடம்பெற்றன. 17ஆம் தேதி திரும்ப இருந்த நாங்கள் 16ஆம் தேதியே திரும்பினோம். அப்படி இருந்தும் கல்வி அமைச்சு எங்களுக்கு 14 நாள் கட்டாய விடுப்பு அளித்து வீட்டில் இருக்குமாறு கூறியது. அதற்கு அடிபணிந்து நானும் என் நண்பர்களும் வீட்டிலேயே இருந்தோம்,” என்றார் பட்டயக் கல்வியை முடித்து தேசிய சேவை செல்ல இருக்கும் 20 வயது அனுராக் பிரபாகர் (படத்தில் வலமிருந்தது இரண்டாவது).
வெளியே செல்ல முடியாமல் வீட்டில் இருந்தபோது புதிய பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.
“வீட்டில் இருந்தபோது பட்டயக் கல்விக்கான தேர்வு ஒன்றுக்குத் தயார்செய்தேன். நான் ஈடுபட்ட புதிய நடவடிக்கைகளில் யோகாசனமும் ஒன்று. வீட்டிலேயே இருப்பதால் ஏற்பட்ட மன உளைச்சலைக் குறைக்க யோகாசனப் பயிற்சி பெரிதும் உதவியது.
“இன்னும் சில மாதங்களில் தேசிய சேவைக்கு செல்லவிருக்கிறேன். ஆனால் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் வெளியே சென்று உடற்பயிற்சி செய்து என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம் எனக்குள் இருக்கிறது.
“இன்னும் சில நாட்களில் 14 நாள் கட்டாய விடுப்பு முடிவடைந்தாலும் நான் சமூகத்திற்கு எனது பங்கை ஆற்ற முடிந்தவரை வெளியே செல்லாமல் வீட்டில் இருக்க முடிவெடுத்து உள்ளேன். அரசாங்கம் கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக அறிவிக்கும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தினந்தோறும் நான் தெரிந்து வைத்துக்கொள்கிறேன். அதன்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன்.
“சமூகத்துக்கு ஆற்றும் பங்காக நாம் சுய கட்டுப்பாடோடும் சமூக உணர்வோடும் நடந்துகொள்ளவேண்டும். வீட்டில் இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி நம்மைப் பலவழிகளில் மேம்படுத்திக்கொள்ளலாம்,” என்று அனுராக் தெரிவித்தார்.
திடீரென முடங்கிய சுயதொழில் மனபாரத்தையும் இறக்கிவிட முடியவில்லை
கொரோனா கிருமித்தொற்றின் காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பற்றி புகைப்படக் கலைஞரான 30 வயது கிஷோர் சந்திரமோகன் மனம் திறந்தார்.
“சற்றும் எதிர்பார்க்காத, சவால்மிக்க காலகட்டத்தில் சிக்கியிருப்பதாக நான் உணர்கிறேன்.
“புகைப்படக் கலைஞராக நான் வீடுகளிலும் சமூக நிகழ்வுகளிலும் நடைபெறும் நிகழ்ச்சிகளை நம்பி தொழில் நடத்துகிறேன்.
“இந்த கொவிட்-19 கிருமித் தொற்றால் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். “அரசாங்க அமைப்புகள், தொழில் துறைகள் உட்பட அனைத்து அமைப்புகளும் அவற்றின் நிகழ்ச்சிகளை அடுத்த பல மாதங்களுக்கு ரத்து செய்துவிட்டன.
“கிருமித்தொற்று காரணமாக மக்களும் வெளிநாடுகளுக்குச் செல்வதில்லை. வீட்டைவிட்டு பலர் அதிகம் வெளிவருவதும் இல்லை. இதனால் கடப்பிதழுக்கான புகைப்படத்தைக்கூட எடுத்துக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் சிலர் தற்போது தொடர்புகொண்டு சிறுசிறு வேலைகள் வழங்குகிறார்கள்.
“எனது ஸ்டூடியோவுக்கான வாடகையைச் செலுத்துவதில் எனக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“வாடகைக்கான பணத்தை திரட்டுவதற்காகவே பகுதி நேர வேலை செய்தாக வேண்டியதாயிற்று.
“ஆனால் எனக்கு பகுதி நேர வேலை ஏதும் கிடைக்கவில்லை.
“கடந்த வியாழக்கிழமை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வெளியிட்ட புதிய திட்டங்களால் சற்று மன நிம்மதி ஏற்பட்டுள்ளது.
“கடை உரிமையாளர்களுக்குத் தாராளமாக சொத்து வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதைக் கொண்டு உரிமையாளர்கள் எங்களைப் போன்ற வாடகைதாரர்களுக்கு வாடகைச் சலுகை அளித்தால் பேருதவியாக இருக்கும்.
“சாதாரண இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. இரவு நேரங்களில் நண்பர்களைச் சந்தித்து வாழ்க்கையைப் பற்றி பேசுவோம். தற்போது என் நிலைமையைப் பற்றி பகிர்ந்துகொள்ளக்கூட யாரையும் சந்திக்க முடியவில்லை.
“அனைவரும் அவரவர் வீட்டிலேயே இருக்கின்றனர்,” என்று வேதனையுடன் குறிப்பிட்டார் கிஷோர்.
நனவான கனவு ஒரேயடியாக கலையும் அபாயம்
உலகெங்கும் மின்னல் வேகத்தில் பரவிவரும் கொரோனா கிருமித் தொற்றால் வாகனங்களை விற்கும் 30 வயது மோஹன் குமார் வடமலையனின் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.
“கிருமித்தொற்றால் மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கே முன்னுரிமை வழங்குகின்றனர். அதுதான் சரியான போக்கு. ஆனால் என்னைப் போன்றவர்களுக்கு அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பொருளாதாரம் நல்ல முறையில் இருக்கும்போதுதான் கார் வாங்குவது, மேம்படுத்துவது, மாற்றுவது போன்ற சிந்தனைகள் பொதுமக்களுக்குத் தோன்றும். இன்றைய நெருக்கடிமிக்க காலக்கட்டத்தில் கார் பற்றி எவரும் யோசிக்கப்போவதில்லை.
“எங்கள் கடையில் நாங்கள் வைத்துள்ள கார்களுக்கு மாதந்தோறும் கடனுக்கு வட்டி கட்டியாகவேண்டும்.
“கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட மீட்சிக்கான வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் சம்பந்தப்பட்ட கட்டணங்களுக்குத் தள்ளுபடிகளும் சலுகைகளும் அதிகம் இடம்பெற்றுள்ளன.
“வங்கிகளும் கடனுக்கான வட்டியைச் சில மாதங்களுக்குத் தள்ளுபடி செய்தால் என்னைப் போன்ற சிறிய நிறுவனங்களுக்குப் பேருதவியாக இருக்கும். “சாதாரண குடும்பத்திலிருந்து வந்த நான் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்த கார் விற்பனை நிறுவனத்தைத் தொடங்கினேன்.
“இதன் மூலம் எனது நீண்டநாள் கனவு நனவானது. ஆறு பேருக்குச் சம்பளம், அலுவலகத்திற்கான வாடகை, கார்
களுக்கான மாதந்தோறும் செலுத்த வேண்டிய கடன், அதையெல்லாம் தாண்டி குடும்பச் செலவு என அடுத்த சில மாதங்கள் எப்படிக் கழியப்போகின்றன என்பதை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
“நனவான என் நீண்டநாள் ஆசை இந்த கொரோனா கிருமித்தொற்றால் கலைந்துவிடும் என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டுள்ளது,” என்றார் மோஹன் குமார்.
கல்வி பற்றிய கவலை எனக்குள் எழுந்துள்ளது
மலேசியாவில் மருத்துவம் பயிலும் 25 வயது வினிஷா பிள்ளை சிங்கப்பூரில் இருந்தபோது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மலேசியா பிறப்பித்தது. இதையடுத்து வினிஷா சிங்கப்பூரிலேயே தங்கி விட்டார்.
“மலேசியராக இருந்தாலும் நான் சிங்கப்பூர் நிரந்தரவாசி. குடும்பத்தினர் இங்கே இருப்பதால் எனக்கு மன நிம்மதியாக இருக்கிறது. சிங்கப்பூரர்கள் சிலர் மலேசியாவில் நான் பயிலும்
பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனர். மாணவர் விசாவை புதுப்பிக்க மலேசிய குடிநுழைவு ஆணையத்திடம் தங்களது கடவுச்சீட்டை அவர்கள் கொடுத்திருந்தனர். அதனால் அவர்களால் சிங்கப்பூர் திரும்பமுடியவில்லை. இருப்பினும் பலசரக்குக் கடைகள் திறந்திருப்பதால் அத்தியாவசியப் பொருட்களை வாங்க அவர்களால் முடிகிறது. அவர்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை. எனினும் கல்விக்கான தேர்வுகள் எவ்வாறு நடைபெறும், பாடங்கள் எப்படி நடத்தப்படும் என எனக்குள் பல கேள்விகளும் கவலையும் எழுந்துள்ளன,” என்று வினிஷா கூறினார்.
திட்டம் ரத்தானதில் வருத்தம் இல்லை
மார்ச் பள்ளி விடுமுறையில் தமது மனைவியுடன் பாலி சென்றிருந்த 29 வயது முகம்மது ஷேக் ஃபைசல் கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக விடுக்கப்பட்ட பயண எச்சரிக்கைக்கு அடி
பணிந்து விடுமுறைத் திட்டத்தை ரத்து செய்து பாதியிலே நாடு திரும்பினார். “முதலில் இருவருக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. ஆனால், எங்கள் நலனுக்காகத் தான் அரசாங்கம் பயண எச்சரிக்கையை அறிவித்தது என்ற புரிதல் எங்களுக்கு இருந்தது. எனவே, பயணம் பாதியிலேயே முடிந்ததைப் பற்றி நாங்கள் வருத்தப்படவில்லை.
“தனியார் துணைப்பாட வகுப்பு ஆசிரியராகப் பணிபுரியும் எனக்கு வீட்டில் இருந்தபடியே வேலை செய்யவேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுவிட்டது. நான் வேலை செய்யும் துணைப்பாட நிலையம் மூடப்பட்டதால் வீட்டில் இருந்தவாறு வேலை செய்கிறேன்.
“எங்கள் நிலையம் ஏற்கெனவே இணையம் வழி கற்றலை ஊக்குவித்து வந்ததால் நாங்கள் எளிதில் இந்தக் கற்பித்தல் முறையைப் பின்பற்றினோம்.
“மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு திட்டங்களைச் செயல்படுத்தினோம். இணையம் வழி கற்றலை மாணவர்களின் பெற்றோர் வரவேற்றனர். கிருமித்தொற்று மோச மாகாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இச்சவால்மிக்க காலகட்டத்தை ஒன்றிணைந்து கடந்து செல்ல வேண்டும்,” என்றார் ஷேக் ஃபைசல்.