அன்பர் தினத்தன்று எங்கு செல்லலாம் என்று சில இளையர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது, இளைஞர் சுவாதி ஒரு நூதன முயற்சியில் இறங்கினார். கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடி பல தியாகங்கள் செய்து வரும் சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களையும் அன்பளிப்புப் பைகளையும் 23 வயது அ.சுவாதி லஷ்மி அன்றைய தினத்தில் வழங்கினார்.
கொவிட்-19 கிருமித் தொற்று சிங்கப்பூரை பாதித்து வர, சுகாதார ஊழியர்கள் அதனைக் கட்டுப்படுத்த தீவிரம் காட்டி வருவதை உணர்ந்து இச்செயலில் இறங்கினார் சுவாதி. சுகாதார ஊழியர்களின் தன்னலமற்ற பணியை அங்கீகரித்து அவர்களுக்கு உற்சாகம் ஊட்ட சிங்கப்பூர் இளையர் படையினருடன் (Youth Corps Singapore) ஊட்ரம் பெருவிரைவு ரயில் நிலையத்தில் சுவாதி இவ்வாறு அன்பளிப்புகளையும் நன்றி தெரிவிக்கும் குறிப்புகளையும் அளித்தார்.
இதன்வழி நேரடியாக சிங்கப்பூர் பொது மருத்துவமனை சுகாதார ஊழியர்களிடம் நன்றி தெரிவித்தது சுவாதிக்கு மிகுந்த திருப்தியைத் தந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சிங்கப்பூர் இளையர் படையில் வேலைப்பயிற்சிக்காக சேர்ந்த சுவாதி, கடந்த பல வாரங்களாக முழுமூச்சுடன் கொவிட்-19 கிருமித்தொற்று தொடர்பான தொண்டூழிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
கொவிட்-19 கிருமித்தொற்று முதியவர்களையும் அதிகம் பாதித்து வரும் நிலையில் அவர்களிடையே அதன் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவர் மும்முரம் காட்டி வருகிறார்.
வாரநாட்களில் தோ பாயோ வட்டாரத்தில் உள்ள பொது இடங்களில் முதியவர்களைச் சந்தித்து முறையாக எப்படி கைகளைக் கழுவுவது, கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து எப்படி தங்களைத் தற்காத்துக்கொள்வது என்பதையும் தனிப்பட்ட முறையில் விளக்கினார் சுவாதி.
அது மட்டுமல்லாமல், ஜூரோங் ஈஸ்ட் பேட்டையில் இருக்கும் வீவக வீடுகளுக்குச் சென்று வீட்டை விட்டு வெளியே செல்லத் தயங்கும் முதியவர்களை நேரில் சந்தித்து அவர்களது அச்சங்களையும் ஐயங்களையும் போக்கினார்.
உதாரணத்திற்கு அவர்களுக்கு உடல் நலமில்லை என்றால் எப்படி தனியார் மருந்தகத்துடன் தொடர்பு கொள்வது போன்ற உத்திகளை சுவாதி பகிர்ந்துகொண்டார்.
வீட்டில் அவ்வப்போது தாயாருக்குச் சமையலில் உதவும் சுவாதி, நிறைய பேருக்கு சமைப்பது ஒரு வித்தியாச அனுபவமென்றார். ‘வில்லிங் ஹேன்ட்ஸ், வில்லிங் ஹார்ட்ஸ்’ (Willing Hands, Willing Hearts) எனும் அமைப்பில் இவர் சமையல் செய்யவும் உதவினார்.
தினமும் குறைந்த வருமானம் ஈட்டும் சுமார் 6,500 நபர்களுக்கு இந்த அறநிறுவனம், சமைத்த உணவை வழங்கி வருகிறது. சுவாதி போன்ற தொண்டூழியர்கள், சமையலுக்கான காய்கறிகளை நறுக்குவது, உணவைப் பொட்டலம் கட்டுவது, பொட்டலங்களைத் தீவின் வெவ்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்வது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
சுவாதியைப் போலவே சமுதாயத்திற்கு இந்நிலையில் உதவி தேவை என்பதை சிங்கப்பூர் இளையர் படையினரின் மற்றொரு தொண்டூழியரான முகம்மது ஹபிப் பின் அப்துல் காதர் நன்கு உணர்ந்துள்ளார்.
சிறுவர் பருவத்தில் தாமும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்ப பின்னணியிலிருந்து வந்ததாக தெரிவித்த அவர், எத்தகைய பிரச்சினைகளை அவர்கள் தினமும் எதிர்கொள்கின்றனர் என்பதை தம்மால் உணர முடிகிறது என்றார்.
அதனால்தான், தொண்டூழியர்கள் தேவை என ‘ஃப்வூட் ஃபிரம் த ஹார்ட்’ (Food from the Heart) அறநிறுவனம் உதவி கேட்டபோது, உடனடியாக தன் பங்கை ஆற்ற முன்வந்தார்.
இந்த அறநிறுவனம் வசதி குறைந்த குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை இலவசமாக விநியோகித்து வருகிறது.
“வழக்கமாக சேவையாற்றி வந்த சில தொண்டூழியர்கள் தற்போதைய கொவிட்-19 நிலவரத்தால் வர முடியாத பட்சத்தில் உதவ முன்வந்தேன்.
குடும்ப வருமானம் பாதிப்படைந்த நிலையில் இத்தகைய மளிகை பொருட்கள் தாமதமில்லாமல் குடும்பங்களைப் போய் சேர்வது முக்கியம்,” என வலியுறுத்தினார் 26 வயதுடைய முகம்மது ஹபிப்.
கிடங்கு ஒன்றுக்குச் சென்று அரிசி, சூரை மீன் ‘டின்’கள், ‘பிஸ்கெட்டுகள்’ போன்ற பொருட்களைப் பெட்டியில் அழகாக அடுக்கி விநியோகத்திற்காக தயார் செய்வதில் முகம்மது ஹபிப்பின் பங்கு அடங்கியுள்ளது.
ஒவ்வொரு முறையும் சுமார் 17 சக தொண்டூழியர்களுடன் இக்காரியத்தில் ஈடுபடும்போது, கிட்டத்தட்ட 200 குடும்பங்களுக்குத் தேவையான பொருட்களை விநியோகிப்பதற்காக தயார் செய்ய முடிகிறது என்றார்.
தற்போதைய நிச்சயமற்ற சூழலில் நம்பிக்கை தருவதற்காக இளையர்கள் தங்களது பங்கை ஆற்ற முன்வரலாம் என்று குறிப்பிட்ட ஹபிப், தொண்டூழியம் செய்வதற்கு ஏரளாமான வாய்ப்புகள் சிங்கப்பூரில் உள்ளன என்று சுட்டினார்.
சுவாதி தற்போது ‘ஏசிசிஏ’ (ACCA) படிப்பையும் முகம்மது ஹபிப் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் தொடர்பான பட்டப்படிப்பையும் மேற்கொள்கின்றனர்.
மாணவர்களாக இருந்து கொண்டே சமூகத் தொண்டுக்கு நேரம் ஒதுக்க முடிவதாக குறிப்பிட்ட இருவரும், ஒரு சிலர் தங்களது வேலையிலிருந்து விடுப்பு எடுத்து இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது தங்களுக்கு உற்சாகம் அளிப்பதாக கூறினர்.
“வழியில் சந்திக்கும் சுகாதார ஊழியருக்கு நன்றி தெரிவிப்பது போன்ற சிறு சிறு விஷயங்கள் கூட, இனிமையான சூழலை உருவாக்க வழிவகுக்கலாம். இப்படி அனைவரும் தங்களது பங்கை ஆற்றுகையில் இதிலிருந்து நம்மால் மீண்டுவர முடியும்,” என்றார் சுவாதி.