கொவிட்-19 கிருமிப்பரவலால் நேர்முகச் சந்திப்புகள் வெகுவாகக் குறைந்திருந்தாலும் உதவி தேவைப்படுபவர்களுக்கு மற்ற வழிகளில் தங்களின் அக்கறையைக் காட்ட கிஷோர்குமார்-ஜமுனா தம்பதியர் முற்படுகின்றனர். இவர்கள் இருவருமே சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்தின் இளையர் பிரிவில் பணியாற்றும் தொண்டூழியர்கள்.
கிட்டத்தட்ட 5000 உறுப்பினர்கள் கொண்ட இந்த இளையர் பிரிவில் உள்ள 28 வயது கிஷோர்குமார் சிவகுமார் மற்றும் அவரின் மனைவி 29 வயது ஜமுனா குமரேசன், ‘எல்டர்எய்ட்’ (Elderaid) திட்டத்தில் இணைந்து தனித்து வாழும் முதியோருக்குத் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்திலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த இவர்கள், தொண்டூழிய அமைப்பு ஒன்றில் சேர்வது இதுவே முதல் முறை.
“செஞ்சிலுவைச் சங்கம் அனைத்துலக அளவில் நற்பெயரைக் கொண்ட ஓர் அமைப்பு. அத்துடன், எங்களுக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் இந்த அமைப்பில் இருப்பதால் இதில் சேர்வதற்கு எளிதாக இருந்தது,” என்றார் தளவாட துறையில் நிர்வாகியாகப் பணிபுரியும் கிஷோர்.
செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்ந்த பிறகு அடிப்படை முதலுதவி அளிப்பது, பிறருடன் நட்புறவை ஏற்படுத்திக்கொள்வது, மனநல உதவி வழங்குவது ஆகியவற்றுக்கான முறையான பயிற்சி இவர்களுக்கு வழங்கப்பட்டது.
‘எல்டர்எய்ட்’ திட்டத்தில் இருப்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, குறிப்பிட்ட ஒரு முதியவரைக் கண்டு அவரது தேவைகளைக் கவனித்து வருவர். கடந்த ஆண்டு மே மாதத்தில் இந்தத் திட்டத்தில் சேர்ந்த தம்பதியர், 77 வயது மூதாட்டி ஒருவருக்குப் பராமரிப்பு அளித்து வருவதாகத் தெரிவித்தனர்.
ஒவ்வொரு முறையும் அந்த மூதாட்டியைக் சந்திக்கும்போது கிட்டத்தட்ட மூன்று, நான்கு மணி நேரத்திற்கு அவருடன் உறவாடுவதாக அந்தத் தம்பதியர் தெரிவித்தனர்.
“தனித்து வாழும் அந்த மூதாட்டியின் வீடு சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளதா என்பதைப் பார்க்கவேண்டும். அவரது உடல்நிலையையும் மனநிலையையும் நாங்கள் கண்காணிக்கவேண்டும். தரப்பட்ட மருந்துகளைச் சரியாக உட்கொள்கிறாரா என்பதைக் காணவேண்டும். தேவைப்பட்டால் அவர்களை மருந்தகங்களுக்கு அழைத்துச் செல்லவேண்டும்,” என்றார் கிஷோர்குமார்.
கொவிட்-19 கிருமித்தொற்று குறித்த ஆக அண்மைய தகவல்களுடன் மேலும் பல பயனுள்ள தகவல்களை இந்த முதியவர்களிடம் தெரிவிக்கும் பொறுப்பு இவர்களைப் போன்ற பராமரிப்பாளருக்கு உள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கிய கொரோனா கிருமிப் பரவல் தீவிரமடைந்ததை அடுத்து தொண்டூழியர்கள், முதியவர்களை நேரில் சந்திப்பதற்குப் பதிலாக அவர்களுடன் தொலைபேசி வழியாகத் தொடர்புகொள்ளத் தொடங்கினர்.
“தொண்டூழியர்களான எங்களது நலனை செஞ்சிலுவைச் சங்கம் சிரத்தையுடன் கவனிக்கிறது. சமூக இடைவெளியைக் கட்டிக்காத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த சரியான ஆலோசனைகளை வழங்கியதுடன் வெளி நடவடிக்கைகளைப் படிப்படியாகக் குறைக்க சங்கம் உதவியது,” என கிஷோர்குமார் கூறினார்.
இருந்தபோதும் நேரடிச் சந்திப்பு இல்லாமல் தரமான பராமரிப்பை வழங்குவது சற்று சவாலாக இருப்பதாக அந்தத் தம்பதியர் குறிப்பிட்டனர்.
தனிமையிலும் பேச்சுத்துணை இல்லாத நிலையிலும் இருக்கும் முதியோருக்கு கிருமிப் பரவல் நேரத்தில் ஆதரவளிப்பது மிகவும் முக்கியம் என இந்தத் தம்பதியர் தெரிவித்தனர்.
“மற்றவர்களைக் காட்டிலும் முதியோர் இந்நோயால் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர். ஆயினும் இளையர்களான எங்கள் மீதான அக்கறை அவர்களுக்கு அதிகம் உள்ளது,” என்று தரவு ஆய்வாளராகப் பணிபுரியும் திருமதி ஜமுனா கூறினார்.
வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாடு நிலவும் இந்நேரத்தில் தமிழகத்தில் இருக்கும் தங்களது பெற்றோர்களுடன் தொலைபேசியில் அடிக்கடி தொடர்புகொண்டு பேசுவதாக அவர்கள் கூறினர். வயதான காலத்தில் பிறரது பராமரிப்பும் தைரியமூட்டும் வார்த்தையும் முதியோருக்கு அதிகம் தேவைப்படுவதைத் தங்கள் சேவையின்வழி உணர்வதாகக் கூறும் இந்த இளையர்கள், இதனைப் பற்றி பிற இளையர்களும் யோசிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
“பிற்காலத்தில் நாமும் இவர்களைப் போல மூப்படைவோம் என்பதை நினைவில் கொள்வது அவசியம்,” என்று திருமதி ஜமுனா கூறினார்.
நோய்ப் பரவல் நிலவும் நேரத்தில் நேரடித் தொடர்பு குறைந்தாலும் அதற்கு ஈடாக மற்ற வழிகள் மூலம் அக்கறைக்குரியவர்களுடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.
“சமூக இடைவெளியைக் கட்டிக்காக்க வேண்டும் என்பதற்காக இவர்களுடன் உறவாடுவதை அறவே கைவிடவேண்டும் என்பதில்லை. உங்களுக்குத் தெரியாதவர்களாக இருந்தாலும் அக்கம்பக்கத்தில் வசிக்கும் முதியோரைக் காணும்போது தூரத்திலிருந்து இவர்களுக்குக் கைகாட்டி சிரித்தாலே அவர்கள் மகிழ்ச்சி அடைவர்,” என்றும் அவர் கூறினார்.