பலதுறை தொழிற்கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு தற்போது பல்கலைக்கழகம் செல்லக் காத்திருக்கும் 19 வயது வினோஷா அன்பரசன் (படம்) போன்ற மாணவர்களுக்கு இந்தக் கிருமிப் பரவல் நேரம் வழக்கமான வாழ்க்கை முறையிலிருந்து மாற்றிவிட்டது. ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரியில் ஹோட்டல் மற்றும் உபசரிப்புத் துறை படிப்பை வெற்றிகரமாக முடித்த வினோஷா, நண்பர்களைச் சந்திக்கவோ வெளியே செல்லவோ முடியாமல், வீட்டில் இருந்துகொண்டே பட்டயம் பெற்றதைக் கொண்டாட வேண்டியுள்ளது.
நார்த் வியூ உயர்நிலைப் பள்ளியில் சாதாரண நிலைத் தேர்வை முடித்த பிறகு அடுத்த நிலை கல்வி பற்றி பலரிடம் கலந்துஆலோசித்த வினோஷா, இறுதியில் ஹோட்டல், உபசரிப்புத் துறையில் பயில முடிவு செய்தார். “அனைவருடனும் சிரித்துப் பழகும் என் சுபாவத்தைக் கண்டு எனக்கு உபசரிப்புத் துறை ஏற்றதாக இருக்கும் என எண்ணி என் பெற்றோரும் நண்பர்களும் அதனை ஊக்குவித்தனர்,” என்று அவர் தெரிவித்தார். அத்துடன், இந்தத் துறையில் வேலை வாய்ப்பு நன்றாக இருக்கும் என்று அப்போது எண்ணி இதில் சேர்ந்ததாக வினோஷா கூறினார்.
வேலைப் பயிற்சிக்காக வியட்நாமின் டானாங் நகரிலுள்ள ‘ஹயட் ரீஜன்சி ரிசோர்ட் அன்ட் ஸ்பா’ ஹோட்டலில் பணியாற்றியபோது கொவிட்-19 கிருமிப் பரவல் தலைதூக்கத் தொடங்கியதாக வினோஷா தெரிவித்தார். கடந்தாண்டு ஆகஸ்ட் அங்கு சென்ற அவர், இவ்வாண்டு பிப்ரவரி
சிங்கப்பூருக்குத் திரும்பினார்.
“வெவ்வேறு நாடுகளில் இருந்த எங்களை சிங்கப்பூருக்கு முன்கூட்டியே வரவழைக்க எங்களது விரிவுரையாளர்கள் முயன்றனர். சீனாவில் வேலைப் பயிற்சி மேற்கொண்டிருந்த என் பள்ளி நண்பர்கள் உடனே சிங்கப்பூருக்குத் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
வினோஷா முன்கூட்டியே திரும்ப முடிந்ததால் அவருக்கு வீட்டில் தங்கும் உத்தரவு கொடுக்கப்படவில்லை. ரிபப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி வேலை வாய்ப்புகளை மாணவர்களுக்குத் தேடித் தருவதுடன் கற்றலைத் தொடர்வதற்கான வளங்களை அவர்களுக்குப் பரிந்துரைக்கிறது. இருந்தபோதும் தற்போது காணப்படும் வேலை வாய்ப்புகளின் கவர்ச்சித்தன்மை முன்னைய ஆண்டுகளைவிட குறைவாக இருப்பதாகக் கூறிய வினோஷா, இதற்கு தற்போதைய கிருமித்தொற்று காரணமாக இருக்கக்கூடும் என்று தாம் நினைப்பதாக இவர் சொல்கிறார்.
தொடர்ந்து படிப்பதே தற்போதைய சூழலுக்கு உகந்தது எனத் தெரிவிக்கும் வினோஷாவுக்கு என்யுஎஸ், என்டியு, எஸ்எம்யு ஆகிய மூன்று கல்விக் கழகங்களிலிருந்தும் வர்த்தகத் துறையில் கல்வி பயில அனுமதி கிடைத்துள்ளது.
இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்து இரட்டை பட்டப்படிப்பை எடுப்பது பற்றி யோசித்து வருவதாக அவர் கூறினார். எனினும், இந்தக் கிருமிப் பரவல் சூழலிலும் உபசரிப்புத் துறையில் திறனாளர்கள் தேவைப்படுவதாக வினோஷா கருதுகிறார்.
பிறரின் தேவைகளைத் துல்லியமாக அறிந்து அவர்களைப் பொறுமையுடன் கவனிக்கக்கூடிய இவர்கள், வீட்டில் தங்கும் உத்தரவின்கீழ் இருப்பவர்கள் ஹோட்டலில் பராமரிக்கப்படுவதை இவர் சுட்டுகிறார்.
“ஒருவகையில் இவர்களை முன்னிலை ஊழியர்கள் என்றே கருதலாம்,” என்று அந்த இளம்பெண் பெருமையுடன் கூறுகிறார்.
கிருமிப் பரவலை முறியடிக்கும் திட்டத்தின்போது வீட்டில் முடங்கியிருந்தாலும் மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கட்டிக்காக்க வேண்டும் என்கிறார் வினோஷா.
உபசரிப்புத் துறையில் இருப்பவர்கள், தங்களுக்குள் இருக்கும் கவலைகளை மறைத்து பிறர் முன்னிலையில் புன்சிரிப்புடன் காட்சியளிக்கும்போது அவர்கள் தங்களையும் மற்றவர்களையும் மகிழ்விக்கும் பண்பு உன்னதமானது என்று இவர் கருதுகிறார்.
இந்தப் பண்பை அனைவரும் இக்காலகட்டத்தின்போது பின்பற்றினால் கிருமிப்பரவலை எதிர்கொள்ளும் சிரமம் கணிசமாகக் குறையலாம் என்று அவர் சொன்னார்.