கொவிட்-19 கிருமித்தொற்று மக்கள் நடமாட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்தியிருக்கிறது. சமூகத்தின் வெவ்வேறு பிரிவினர் இந்நிலையில் மனநல பிரச்சினைகளை அனுபவிக்கக்கூடும், குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் சீரான அமைதியான மனதுடன் இருக்க வேண்டும் என்ற அக்கறையில் அலெக்சாண்டிரா மருத்துவமனை ‘அலெக்ஸ் ஹீல்’ எனும் தொண்டூழியத் தோழமைத் திட்டத்தை நடத்தி வருகிறது.
இதில் தொண்டூழியர்கள் மெய்நிகர் காணொளித் தொடர்பு வழி, அலெக்சாண்டிரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொவிட்-19 நோயாளிகளிடம் உரையாடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களிடம் நண்பர் போல் பேசி, அவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்து கேட்கின்றனர். இத்தோழமைத் திட்டத்தில் தொண்டூழியராக சேவையாற்றி வருகிறார் தேசிய தொடக்கக் கல்லூரியில் பயிலும் எஸ். வெனிஷா.
இந்த 17 வயது இளையர் அண்மையில் கியென் தெக் தங்கும் விடுதியில் கொவிட்-19 நோய் தொற்றிய இந்திய வெளிநாட்டு ஊழியரிடம் ‘சூம்’ எனும் மெய்நிகர் சந்திப்பு காணொளி தொடர்பு வழியாக உரையாடினார்.
அந்த வெளிநாட்டு ஊழியர் கடந்த மாதம் 23ஆம் தேதி அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமது சொந்த ஊருக்குச் சென்று வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது என்றும் இதுவரையில் தமக்குக் கிருமித்தொற்று இருப்பதை குறித்து தமது குடும்பத்தினரிடம் சொல்லவில்லை என்றும் அவர் வெனிஷாவிடம் கூறினார்.
“அவரின் பிரச்சினைகளை செவிமடுத்தி கேட்டதன் மூலம் அவருக்கு உதவியுள்ளேன் என நம்புகிறேன். தமது குடும்பத்தை வெகு நாட்களாக பார்க்காத ஏக்கம் அவருக்கு உள்ளது, அவர் களைப் பற்றி கேட்டபோது, அவர் மகிழ்ச்சி அடைந்தார்,” எனச் சொன்னார் வெனிஷா.
கடந்த ஆண்டு தம் தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது,
அங்குள்ள சூழலை கூர்ந்து கவனித்த வெனிஷா அம்மருத்துவமனையிலேயே தொண்டூழியம் புரிய எண்ணினார். பெரும்பாலும், குடும்ப உறுப்பினர்கள் நோயாளியைப் பார்க்க வந்து அவர்களிடம் உரையாடும்போது அதில் அந்த நோயாளிகள் உற்சாகம் அடைவது வெனிஷாவை இத்தொண்டூழியச் சேவையில் ஈடுபடத் தூண்டியது.
காணொளி வழியாக உரையாடுவதன் தாக்கம் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஈடாகாது என்றாலும், அவர்களின் பிரச்சினைகளைக் கேட்பதும் நோய் பற்றி சிந்திக்காமல் இருக்க மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவதும் இந்நிலையில் முக்கியமாகிறது என வெனிஷா குறிப்பிட்டார். இத்தகைய அர்த்தமுள்ள தொண்டூழிய அனுபவங்கள் எதிர்காலத்தில் ஒரு நல்ல மருத்துவராக ஆக வேண்டும் என்ற இவரது லட்சியத்திற்கு அடித்தளத்தை அமைத்துத் தருகிறது.