‘ஸ்டார்ட்டப் வீக்கெண்ட்’ (Startup Weekend) என்ற வருடாந்திர போட்டி இம்முறை சற்று வித்தியாசமாக இணையம் வழி ஏப்ரல் 24 முதல் 26ஆம் வரையிலான தேதிகளில் நடத்தப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்று நோய்க்கான தடுப்பு மருந்தை உருவாக்க ஒர் ஆண்டு முதல் 18 மாதகங்கள் எடுக்கும் என்றும் இந்த நோய் நீண்ட காலத்திற்கு உலகில் இருக்கும் என்றும் கூறினார் நிகழ்ச்சியின் தொடக்க அங்கத்தில் சிறப்புப் பேச்சாளராக இடம்பெற்ற வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன்.
“நாம் செய்யும் அனைத்தையும், அதன் அடிப்படை அம்சங்கள் வரை மறுபரீசிலனை செய்யவேண்டும். இது வெறும் ஒரு புது நிறுவனத்தையோ புது பொருளையோ புது சேவையையோ உருவாக்குவதற்கு மட்டுமில்லை.
ஆக்கபூர்வ பிளவு (creative disruption) ஏற்படும் இச்சமயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். இந்த தைரியமான புதிய உலகத்தை உருமாற்றும் வாய்ப்பு உங்களது பொருட்களுக்கும் சேவைகளுக்கும் உண்டு,” என்றார் காணொளி மூலம் பேசிய அமைச்சர் விவியன்.
இந்தப் போட்டியில் 750க்கும் மேல் பங்கேற்பாளர்கள் இடம்பெற்றனர். குழுக்களாகப் பிரிக்கப்பட்ட இவர்கள், 54 மணி நேரத்திற்குள் புத்தாக்கமிக்க படைப்பை மின்னிலக்க முறையில் உருவாக்கினார்கள். அதில் 12 குழுக்கள் இறுதி சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு, முதல் மூன்று இடங்களைப் பிடித்த குழுக்கள் பரிசுகளைப் பெற்றன.
சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் ‘மைண்ட்ஹைவ்’ (Mindhyve) என்ற குழு, மனநலத்திற்கான செயலியை உருவாக்கியதற்கு முதல் பரிசைத் தட்டிச் சென்றது.
மனநலத்திற்கான முக்கியத்து வம் அதிகரித்து வரும் இந்நிலையில் இந்தச் செயலி பலருக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறார் செயலியின் பொருள் மேம்பாட்டுப் பிரிவுக்குத் தலைமை தாங்கும் திரு ராபர்ட் ராஜேஸ்வரன், 29.
திரு ராபர்ட் உட்பட பெட்ரினா கோமெஸ், 27, இலேன் யோ, 27, லிடியா சியோங், 27 ஆகிய நான்கு இளையர்களை உள்ளடக்கிய குழு, ‘மைண்ட்ஹைவ்’.
“மக்களின் உள்ளங்கைகளுக்குள் மனநல சிகிச்சைகளைப் பெறும் வசதியை வழங்குகிறோம். சில விரல் அழுத்தங்களில் தேவையான அனைத்து வளங்களையும் பெறலாம்.
“இதற்கு முன் மனநலத் தேவைகளுக்காக நேரடியாக மருத்துவரை அணுகவேண்டும். அவர்கள் தக்க மனநலதிற்கான சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்கள். அல்லது இணையம் வழி உதவி நாடலாம். அல்லது மற்றவர்களிடம் உதவி கேட்கலாம். ஆனால் மன
நலம் குறித்த உதவியை மற்றவர்களிடம் கேட்பது எல்லோருக்கும் பொருத்தமாக இருக்காது,” என்றார் திரு ராபர்ட்.
மன அழுத்தம் குறித்த நோய்களால், ஓர் ஆண்டுக்கு சிங்கப்பூரின் பொருளாதாரத்திற்கு ஏறத்தாழ $3.2 பில்லியன் செலவாகிறது என்றும் மனநலத்திற்கு முதலீடு செய்யும் ஒவ்வொரு $1க்கும் இணையாக கிட்டத்தட்ட $5.60 முதலீட்டு ஆதாயம் (return on investment) கிடைக்கும் என்றும் ‘மைண்ட்ஹைவ்’ குழு, போட்டியின் இறுதிச் சுற்று படைப்பில் தெரிவித்தது.
நிறுவனங்களுடன் இணைந்து ஊழியர்களுக்கு மனநல வசதிகளை வழங்க திட்டங்கள் உள்ளன என்றும் மே மாத இறுதிக்குள் இந்தச் செயலி தயாராகும் என்றும் தெரிவித்தார் ராபர்ட்.
இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்வதும் சில அம்சங்களைப் பெறுவதும் இலவசமாக இருந்தாலும், சிகிச்சை பெறுவதற்குக் கட்டணம் செலுத்தவேண்டும்.
கட்டணம் குறித்த விவரங்களைக் கூடிய விரைவில் தீர்மானம் செய்யவுள்ளதாகவும் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் ஊழியர்களுக்குச் சலுகைகள் வழங்க வாய்ப்புகள் இருக்கலாம் என்றும் சொன்னார் ராபர்ட்.
“தற்போது ஏறக்குறைய ஐந்து மனநல சிகிச்சை மருத்துவர்களை இந்தச் செயலியின் பயன்பாட்டிற்குத் தேர்வுசெய்துள்ளோம். மேலும் பல மருத்துவர்களைப் பேட்டி கண்டு, தேர்வுசெய்யவுள்ளோம். இந்தச் செயலிக்கான தேவை நாளடைவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்,” என்றார் ராபர்ட்.