கி. ஜனார்த்தனன்
கொவிட்-19 கிருமிப்பரவலின் காரணமாக பலதுறை தொழிற்கல்லூரி கல்வியை நிறைவுசெய்த மற்ற மாணவர்களைப் போல தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியைச் சேர்ந்த 19 வயது நிமலன் அன்பரசனுக்கு பட்டயமளிப்பு விழா இல்லை.
‘ஏரோஸ்பேஸ் எலக்ட்ரானிக்ஸ்’ பட்டயப் படிப்பில் மிகச்சிறந்த 4.0 ஜிபிஏ புள்ளிகளுடன் தேர்ச்சிபெற்ற நிமலனும் அவரது நண்பர்களும் ‘மைன்கிராஃப்ட்’ என்ற மென்பொருள் வழியாக தங்களுக்குப் பட்டயமளிப்பு விழாவைத் தாங்களாகவே ஏற்பாடு செய்துகொண்டனர்.
‘மைன்கிராஃப்ட்’ வழியாக விழா பெரும் அரங்கம் ஒன்றை அமைத்து ‘2020ன் வகுப்பு’ என்ற பெரிய பதாகையை அந்த அரங்கத்திற்கு வெளியே இவர்கள் பொருத்தியிருந்தனர். இந்த மெய்நிகர் உலகில் ‘அவதாரங்கள்’ எனப்படும் தங்களைப் போலக் காணப்படும் மாதிரி மனித உருவங்களை உருவாக்கிய இந்த கெட்டிக்கார மாணவர்கள், அந்த உருவங்களின் வாயிலாக அரங்கத்திற்குள்ளே பட்டயம் அளிப்பு விழாவுக்குரிய உடைகளுடன் ‘நுழைந்தனர்’.
“எங்கள் பட்டயமளிப்பு விழாவை மறு உருவாக்கம் செய்யும் யோசனையை எங்களது நண்பர் டேவ் முன்வைத்தார். இந்த விழாவில்எங்களைப் பிரதிபலிக்கும் ‘அவதாரங்கள்’ வழியாக பட்டயச் சான்றிதழ்களைப் பெற்றோம்.
பயிற்சித் திட்டத்தில் பதக்க
விருதுகளைப் பெற்றவர்களும் இதன் முலம் பெற்றுகொண்டது போல பாவனை செய்திருந்தோம். நானும் இரண்டு மாணவர்களும் இந்த விழாவில் உரைகளையும் ஆற்றினோம்” என்று வர்த்தகத் துறையிலும் கூடுதலான பாடங்களை எடுத்துப் படித்த நிமலன் கூறினார்.
விமானப் பொறியாளருக்கு உரிய பயிற்சியை நிமலன் இந்தப் பட்டயப் படிப்பில் பெற்றார். 2008ல் சிங்கப்பூரில் முதன்முதலாக விமானக் கண்காட்சி நடந்தபோது எட்டு வயது நிமலனை அவரது தந்தை அழைத்துச் சென்றபோது விமானத்துறை மீதான ஆசை நிமலனின் மனதில் தோன்றியது. கிரீன்வுட் தொடக்கப்பள்ளியில் படித்த நிமலன் கணக்கு, அறிவியல் பாடங்களின்மீது அதீத ஆர்வம் கொண்டார். ‘மேட்ஸ் ஒலிம்பியட்’, ‘அமேசிங் சைன்ஸ்-எக்ஸ் சேலஞ்ச்’ உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டார். பிறகு அவர் அறிவியல், தொழில்நுட்ப பள்ளியில் (எஸ்எஸ்டி) உயர்நிலைக் கல்வியை முடித்தார்.
“தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியில் ஜெர்மானிய விமானவியல் பயிற்சி அமைப்பான லுஃப்த்தான்சாவின் பயிற்சியையும் பெற்றது மற்ற பலதுறை தொழிற்கல்லூரிகளிலிருந்து மாறுபட்ட சிறப்பம்சம்,” என்று அவர் தெரிவித்தார்.
பள்ளிப்பாடங்களை நன்கு கற்றதுடன் பிறருக்குத் தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சி வகுப்புகளையும் அளித்திருக்கிறார் இந்த இளையர். ‘லேசர் கட்டிங்’ எனப்படும் ஒளிக்கற்றையால் வெட்டுதல், ‘3டி ப்ரின்ட்டிங்’ எனப்படும் முப்பரிமாண அச்சிடுதல், நிரலிடுதல் உள்ளிட்டவற்றை அவர் தமது தொழிற்
கல்லூரிக்குள்ளும் பிறருக்கும் செய்து வருகிறார். “இத்தகைய பயிற்சிகளை நானும் எனது இணைப்பாட நடவடிக்கைக் குழுவினரும் பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளி பயிலும் இளையர்களுக்காக நடத்தினோம். பொறியியல் மீதான ஆர்வம் இளையர்களுக்குத் தொடக்கத்திலிருந்தே உருவானால் அவர்கள் வருங்காலத்தில் இத்துறையில் சாதனைகளை நிகழ்த்தக்கூடும்,” என்று ‘ஏ ஸ்டார்’ அறிவியல், தொழில்நுட்ப ஆய்வமைப்பில் வேலைப் பயிற்சியை முடித்துள்ள நிமலன் கூறினார்.
தமது பாடங்களிலும் பொழுதுபோக்கிலும் கொண்டுள்ள ஆர்வமே நேரம் கடத்தாமல் அனைத்தையும் சரியாகச் செய்வதற்கு முக்கிய தூண்டுகோலாக அமைந்ததாக அந்த இளையர் கூறினார். அத்துடன் சொன்னதைச் சொன்னபடியே செய்யும் பொறுப்புணர்வால் பாடங்களில் ஒத்துழைப்பு கொடுக்கக்கூடிய நல்ல நட்பு
களைச் சம்பாதிக்க தம்மால் இயன்றதாக நிமலன் தெரிவித்தார்.